அகமதாபாத்: விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணி தரப்பில் நிர்ணயிக்கப்பட்ட 383 ரன்கள் என்ற மெகா இலக்கை கர்நாடகா அணி 46.2 ஓவர்களில் சேஸிங் செய்து சாதனை படைத்துள்ளது. அதில் கர்நாடகா அணியின் இளம் வீரரான ஸ்ரீஜித் கிருஷ்ணன் 101 பந்துகளில் 3 சிக்ஸ் மற்றும் 20 பவுண்டரிகள் உட்பட 150 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி தரப்பில் விக்கெட் கீப்பராக 28 வயதாகும் ஸ்ரீஜித் கிருஷ்ணன் ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த வீரரான ஸ்ரீஜித் கிருஷ்ணனை மும்பை அணி எப்படி வாங்கியது என்ற கேள்வி எழுந்தது. மகாராஜா டிராபியில் ஸ்ரீஜித் கிருஷ்ணனின் ஆட்டத்தை பார்த்து வாங்கியது தெரிய வந்தது.

இதன்பின் ரஞ்சி டிராபியில் ஸ்ரீஜித் கிருஷ்ணன் சதம் விளாசி கவனத்தை ஈர்த்திருந்தார். இந்த நிலையில் மும்பை அணியின் பிளேயிங் லெவனுக்குள் நேரடியாக இடம்பிடிக்கும் வகையில் ஸ்ரீஜித் கிருஷ்ணன் அசத்தலான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா அணி களமிறங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி ஸ்ரேயாஸ் ஐயர் அபார ஆட்டத்தால் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை குவித்தது. இதனால் கர்நாடகா அணிக்கு 383 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை சேஸிங் செய்வது எளிதான விஷயமாக இருக்காது என்று பார்க்கப்பட்டது.
இதன்பின் நிகின் ஜோஷ் - மயங்க் அகர்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்த நிலையில், ஜோஷ் 21 ரன்களிலும், சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த அனீஷ் - ஸ்ரீஜித் கிருஷ்ணன் கூட்டணி இணைந்து அதிரடியில் பொளந்து கட்டியது.
அதிரடியாக ஆடிய அனீஷ் 66 பந்துகளில் 82 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஸ்ரீஜித் - பிரவீன் துபே கூட்டணி அதிரடியை அடுத்த கியருக்கு கொண்டு சென்றது. இறுதியாக 46.2 ஓவர்களில் கர்நாடகா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 383 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ஸ்ரீஜித் கிருஷ்ணன் 101 பந்துகளில் 4 சிக்ஸ், 20 பவுண்டரி உட்ப 150 ரன்களையும், பிரவீன் துபே 50 பந்துகளில் 65 ரன்களையும் விளாசினர்.
மும்பை அணியால் வாங்கப்பட்ட ஸ்ரீஜித் கிருஷ்ணனின் ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மும்பை அணியின் ரிக்கல்டன், ராபின் மின்ஸ் மற்றும் ஸ்ரீஜித் கிருஷ்ணன் ஆகிய மூவரும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால், அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.