பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், இன்னிங்ஸின் முதல் பந்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த ஒரு வீரரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரராக இறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடினார். அவர் 42 பந்துகளில் 70 ரன்களும் (8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), மறுபுறம் தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 50 ரன்களும் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) சேர்த்தனர். டிம் டேவிட் 15 பந்துகளில் 23 ரன்களும், ஜிதேஷ் சர்மா 10 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேஸிங் செய்ய வந்தது. அந்த அணியின் துவக்க வீரராக இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஒரு சிக்ஸர் அடித்தார். புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் அவர் அந்த சிக்ஸரை அடித்திருந்தார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் மூன்று முறை சிக்ஸர் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஏழு வீரர்கள் ஐபிஎல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் அதை ஒரு முறை மட்டுமே செய்துள்ளனர்.
விராட் கோலி, சுனில் நரேன் உள்ளிட்ட வீரர்களும் முதல் பந்தில் சிக்ஸர் அடித்துள்ளனர். ஆனால் யாருமே ஒரு முறைக்கு மேல் அந்த சாதனையை செய்யவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்று முறை ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மேலும், இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடினார். 257.89 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் ஆடியிருந்தார். அதன் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன் சேர்த்தாலும், கடைசி நேரத்தில் ஜோஷ் ஹேசில்வுட்டின் அபாரமான பந்துவீச்சில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்கத் திணறி, பின்னர் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.