டெல்லி: ஐபிஎல் தொடரின் டெல்லி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்ட நிலையில், அந்த அணியின் அடுத்த பயிற்சியாளராக யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பான விதிமுறைகள் வெளியாகியுள்ள நிலையில், 10 அணிகளின் உரிமையாளர்களும் அடுத்தடுத்த பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அக்.31ஆம் தேதிக்குள் தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்கான பட்டியலை அணி நிர்வாகங்கள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங் உடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதன் மூலமாக டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் புதிய பயிற்சியாளரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ராகுல் டிராவிட் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் ராஜஸ்தான் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இம்முறை வெளிநாட்டு பயிற்சியாளர் அல்லாமல் இந்திய பயிற்சியாளரை கொண்டு வர டெல்லி அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது. ஏனென்றால் ஆஃப் சீசனில் இந்திய உள்ளூர் வீரர்களை கண்காணித்து பயிற்சி அளிக்கவும் ஏதுவாக இருக்கும். கடந்த சில சீசன்களாக உள்ளூர் வீரர்களின் திறமையை வளர்க்க டெல்லி அணி முயற்சித்து வருகிறது.
ஆனால் ஆஃப் சீசனில் அவர்களை கண்காணிக்க ரிக்கி பாண்டிங் வருவதில்லை. இதன் காரணமாகவே அவருடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் டெல்லி அணியின் புதிய பயிற்சியாளருக்கான பேச்சுவார்த்தைகள் சில முன்னாள் வீரர்களுடன் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது. அந்த பட்டியலில் முதலில் இருப்பவர் யுவராஜ் சிங் தான்.
டெல்லி அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் இடையில் நல்ல புரிதல் இருப்பதால், யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் யார் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளன.
இவர்களுக்கு துணைப் பயிற்சியாளராக பராஸ் ஆம்ரே, பதானி மற்றும் சேவாக் உள்ளிட்டோரையும் பயிற்சியாளர்கள் குழுவில் கொண்டு வர டெல்லி அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. லக்னோ, பஞ்சாப், கேகேஆர், ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்களை ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், டெல்லி அணி மட்டும் தாமதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.