டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட உள்ளதாகவும், யுவராஜ் சிங்கிடம் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஏழு ஆண்டுகளாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதுவே, அந்த அணியின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இந்த நிலையில், 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக ரிக்கி பாண்டிங், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனராக இருக்கும் சவுரவ் கங்குலி இந்திய பயிற்சியாளர் ஒருவரை டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வந்தார். அவரது முயற்சியால், தற்போது யுவராஜ் சிங்கிடம் பயிற்சியாளர் பதவிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதுவரை எந்த ஒரு அணிக்கும் யுவராஜ் சிங் பயிற்சியாளராக செயல்பட்டதில்லை. ஆனால், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து பஞ்சாப் மாநில அணிக்காக ஆடி வரும் இளம் வீரர்களுக்கு உதவி வருகிறார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரையும் சர்வதேச கிரிக்கெட் ஆடும் அளவிற்கு தயார் செய்ததில் யுவராஜ் சிங்கின் பங்கு மிகவும் அதிகம்.
அதை கருத்தில் கொண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை பயிற்சியாளராக நியமிக்க திட்டமிட்டு உள்ளது. முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமிக்கப்படலாம் என ஒரு செய்தி வெளியாகி இருந்தது. ஆனால். தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தனது பதவியில் தொடர இருக்கிறார்.