டெல்லி: டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு யுவராஜ் சிங் பெயரை ரிஷப் பண்ட் பரிந்துரைத்துள்ளார். இதனை டெல்லி அணியின் உரிமையாளர்கள் ஏற்காததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
டெல்லி அணியின் ஜிஎம்ஆர் மற்றும் ஜிண்டால் நிறுவனங்கள் ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒருமுறை நிர்வகித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக பார்த் ஜிண்டால் டெல்லி அணியை நிர்வகித்து வந்தார். தற்போது டெல்லி அணியின் நிர்வாகம் தரப்பில் ஜிஎம்ஆர் நிறுவனத்தின் கிரண் குமார் கிராந்தியின் கைகளில் உள்ளது.

இருந்தாலும் ரீடென்ஷன், ஒப்பந்தம், ஏலம், பயிற்சியாளர்கள் நியமனம் உள்ளிட்டவற்றை 2 நிர்வாகங்களும் இணைந்து முடிவு எடுக்கவுள்ளன. இதனிடையே டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் சில வாரங்களுக்கு முன், நான் மெகா ஏலத்தில் பங்கேற்றால், எவ்வளவு தொகைக்கு செல்வேன் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேறுகிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டது.
எதற்காக ரிஷப் பண்ட் இப்படியொரு பதிவை எழுதினார் என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன்பின் டெல்லி அணியின் பயிற்சியாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி மற்றும் இயக்குநராக வேணுகோபால் ராவ் இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஐஎல்டி20 லீக்கில் துபாய் கேபிட்டல்ஸ் அணியுடன் ஹேமங் பதானி பணியாற்றி இருந்தார்.
இதனால் ஹேமங் பதானி தலைமைப் பயிற்சியாளராக கொண்டு வரப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் இந்திய பயிற்சியாளர் ஒருவர் தேடப்பட்டு வந்தார். முன்னணி பயிற்சியாளர்கள் யாரும் அவர்களுக்கு சரி வராத நிலையில், ஹேமங் பதானியை வைத்து இம்முறை தயாராக உள்ளது.
அதேபோல் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் டெல்லி அணியின் நிர்வாகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் டெல்லி அணி உரிமையாளர்கள் மத்தியில் மோதல் எழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. டெல்லி அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் குறித்த ஆலோசனையின் போது ரிஷப் பண்ட் தரப்பில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சவுரவ் கங்குலி தரப்பிலும் யுவராஜ் சிங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனை டெல்லி அணியின் உரிமையாளர்கள் ஏற்கவில்லை. இதுவே ரிஷப் பண்ட் - டெல்லி உரிமையாளர்கள் இடையில் பிரச்சனை எழுவதற்கு முதல் புள்ளியாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் எக்ஸ் தளத்தில் எழுதிய பதிவு உரிமையாளர்களிடையே கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ரிஷப் பண்ட்-க்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேலை கொண்டு வர சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல் ரிஷப் பண்ட்-ஐ மெகா ஏலத்திற்கு விடாமல், அவரை ட்ரேட் செய்யவும் சில ஆலோசனைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அக்.31ஆம் தேதி மாலை டெல்லி அணியின் ரீடென்ஷன் பட்டியல் வெளியாகும் போது மிகப்பெரிய அதிர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.