மும்பை: லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்றி வந்த கவுதம் கம்பீர் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், கடந்த சீசனில் யாரையும் அந்த பொறுப்பில் நியமிக்கவில்லை. தற்போது இந்திய வீரர்களை வழிநடத்துவதற்காக ஜாகீர் கானை அந்த பொறுப்புக்கு கொண்டு வருவதில் லக்னோ அணி தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இளம் வீரர்களுக்கு அறிவுரைகள் கூறி அவர்களை சிறப்பாக தயார் செய்து வருகிறார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பின், பவுலிங் பயிற்சியாளராக ஜாகீர் கானை கொண்டு வர முயற்சித்தார்.

ஆனால் ஜாகீர் கான் முழு நேர பயிற்சியாளர் பொறுப்புக்கு வர ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மோர்னே மோர்கலை இந்திய அணிக்குள் கொண்டு வந்தார். தற்போது லக்னோ அணியின் பயிற்சியாளர்களாக ஜஸ்டின் லாங்கர், ஆடம் வோஜஸ் மற்றும் ஜான்டி ரோட்ஸ் மூவரும் இருக்கின்றனர்.
ஏற்கனவே கவுதம் கம்பீர் விட்டுச்சென்ற ஆலோசகர் பொறுப்புக்கும் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் லக்னோ அணி புதிய ஆலோசரை தேடும் பணியில் தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தலைமைப் பயிற்சியாளரை மாற்ற லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா முடிவு எடுத்துள்ளார்.
இந்த நிலையில் லக்னோ அணியின் ஆலோசகர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஜாகீர் கானை கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாகீர் கான் ஆலோசகராக வரும் பட்சத்தில் இந்திய வீரர்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மும்பை அணியில் செயல்பட்ட அனுபவம் இருப்பதால், லக்னோ அணி வீரர்களுக்கும் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
இதற்காக ஜாகீர் கானுக்கு பெரும் தொகை ஒன்று ஊதியமாக வழங்க லக்னோ அணி முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் லக்னோ அணியின் ஆலோசகர் பதவிக்கு வர ஜாகீர் கான் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை. இம்மாத இறுதியில் ஐபிஎல் விதிகள் குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ வெளியிடவுள்ளது. அதன்பின் இந்த பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.