லக்னோ: 2025 ஐபிஎல் தொடர் நாளை முதல் துவங்க உள்ளது. இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாஹிர் கான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோனி பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியின் போது லக்னோ அணியின் உடையான நீல நிற ஜெர்சி அணிந்த ரசிகர்கள் மைதானம் முழுவதும் நிறைந்து இருப்பார்களா? என ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.

ஏனெனில், இதற்கு முந்தைய காலகட்டங்களில் லக்னோ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டிகளின் போது மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சி மட்டுமே காணப்படும். அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடையாகும்.
லக்னோ அணி மட்டுமல்ல, மற்ற ஐபிஎல் அணிகளும் இதே நிலையை சந்தித்து உள்ளன. மும்பை இந்தியன்ஸ் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. வான்கடே மைதானத்தில் கூட பாதி அளவுக்கு மஞ்சள் நிற ஜெர்சியை பார்க்க முடியும்.
இதற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக ரசிகர்கள் இருப்பது தான். பெரும்பாலான ரசிகர்கள் தோனி அந்த அணியில் விளையாடுவதால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற உடையை அணிந்து ஐபிஎல் போட்டிகளை காண வருகின்றனர்.
இது பற்றிய கேள்விக்கு ஜாஹிர் கான் பதில் அளித்து பேசுகையில், "தோனி இருக்கும் வரை மைதானங்களை மஞ்சள் நிறம் ஆக்கிரமித்து இருக்கும். அவர் இருக்கும் வரை இது இப்படித்தான் இருக்கும். அவர் அனைவராலும் விரும்பப்படுகிறார். அவர் விளையாடும் வரை இதில் எந்த மாற்றமும் இருக்காது" என புன்னகையுடன் கூறினார்.
ஜாஹிர் கானின் இந்த பேச்சு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. 2024 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சொந்த மைதானமான அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.
அந்தப் போட்டியில் தோனி 9 பந்துகளில் 28 ரன்களை அடித்தார். மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். அது மறக்க முடியாத நிகழ்வாக ரசிகர்களுக்கு அமைந்தது. அதேபோன்ற ஒரு ஆட்டத்தை இந்த முறையும் தோனி ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.