லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முன்னாள் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கானை பௌலிங் பயிற்சியாளராக நியமிக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஜாகிர் கானை பௌலிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முயன்ற போதும் கம்பீர் பிடிவாதமாக அதற்கு மறுத்திருந்தார்.
ஜாகிர் கானுக்கு பதிலாக முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் மோர்னே மோர்கலை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தேர்வு செய்ய வைத்தார் கம்பீர். இந்த நிலையில், ஜாகிர் கான் அதிரடி திருப்பமாக ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர் விட்டு சென்ற இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்த நிலையில் ஜாகிர் கான் தானும் ஒரு ஐபிஎல் அணியின் ஆலோசகராகும் முயற்சியில், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அல்ல, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டார் கவுதம் கம்பீர். அதன் பின் 2024 ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாறினார். கம்பீர் சென்ற பின் லக்னோ அணியில் ஆலோசகருக்கான இடம் காலியாகவே இருந்தது.
தற்போது அந்த இடத்தை பிடிக்க ஜாகிர் கான் முயற்சி செய்து வருகிறார். லக்னோ அணியும் ஜாகிர் கானை ஆலோசகராக ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இதே லக்னோ அணியின் பௌலிங் பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கலை தான் கம்பீர் இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளராக நியமிக்க வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கவுதம் கம்பீர் மற்றும் ஒரு மோர்னே மோர்கலின் இழப்பை ஜாகிர் கானை வைத்து ஈடு கட்டலாம் என லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணியில் ஆடிய போதே ஜாகிர் கான் இளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டவர். அதன் அடிப்படையில் அவரின் கீழ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வளர்ச்சி அடையும் என அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நம்புகிறார். அதன் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் ஜாகிர் கான் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.