மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன் குவித்த வீரராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன், அடுத்து இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பெற வேண்டும் என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், அந்தத் தொடருக்கான மாற்று துவக்க வீரராக சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா என மூன்று துவக்க வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா விளையாடுவது உறுதியானால், அவரும் ஜெய்ஸ்வாலும் துவக்க வீரராக இறங்குவார்கள். சுப்மன் கில் மூன்றாம் வரிசையில் களமிறங்குவார்.
அந்த நிலையில், சாய் சுதர்சனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு உடனடியாகக் கிடைக்காது. எனினும், அவர் மாற்று வீரராக தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.
இது பற்றிப் பேசிய ரவி சாஸ்திரி, "இந்த இளம் வீரர் சாய் சுதர்ஷன் இந்திய அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் தரமான வீரராக இருக்கிறார். எனது பார்வை எப்போதும் அவர் மீது இருக்கும். இங்கிலாந்து மண்ணில் இடது கை பேட்ஸ்மேனாக, மேலும் இங்கிலாந்து சூழ்நிலைகளை அறிந்த வீரராக, நல்ல நுணுக்கங்களுடன் அவர் ஆடுவது அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கும். இந்திய அணியில் பங்கேற்பதற்கான காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் வீரர்களில் அவர் நிச்சயம் முதல் இடத்தில் இருப்பார்" என்றார் ரவி சாஸ்திரி.
சாய் சுதர்ஷன் 2025 ஐபிஎல் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 456 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதுவரை 9 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களை மட்டும் எடுத்துக்கொண்டால், அவருக்கு அடுத்து ஜோஸ் பட்லர் 406 ரன்கள் எடுத்திருக்கிறார். சுப்மன் கில் 389 ரன்கள் எடுத்திருக்கிறார். மற்ற சிறந்த பேட்ஸ்மேன்களை விடவும் சாய் சுதர்ஷன் அதிக ரன்கள் சேர்த்திருக்கிறார். மேலும் 5 அரை சதங்கள் அடித்திருக்கிறார்.