மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் இம்மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ளும் நடைமுறை இருக்கிறது. அந்த வகையில் தோனிக்கு தற்போது வயதாகி வருவதால், மாற்று விக்கெட் கீப்பரை தேடும் பணியில் சிஎஸ்கே ஈடுபட்டு வருகிறது.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை தங்களது அணிக்கு கொண்டு வர சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் தங்களுக்கு ஜடேஜா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் பிரவீசை வழங்குங்கள் என ராஜஸ்தான் அணி கேட்டு வருகிறது. இதற்கு சிஎஸ்கே அணி ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் ஜடேஜாவை வழங்கக்கூடாது என்று ரசிகர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜடேஜாவை தராமல் சாம்சனை பெற முடியுமா என்பதை தற்போது பார்க்கலாம். ஐபிஎல் விதிகள் படி ஒரு வீரரை மாற்றித்தான் இன்னொரு வீரரை வாங்க வேண்டும் என்பது அல்ல. அதற்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு தரப்பட வேண்டிய தொகையை சிஎஸ்கே அணி நேரடியாக ராஜஸ்தானுக்கு வழங்கி அவரை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 18 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும். இந்த தொகையை வைத்துக்கொண்டு ஏலத்தில் தங்களுக்கு பிடித்த வீரர்களை வாங்கலாம். அதேசமயம் சிஎஸ்கே அணியும் வேறு எந்த ஒரு வீரரையும் வழங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதேபோன்று சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியில் தொடர விருப்பம் இல்லை என தெரிவித்தால், அவர் கண்டிப்பாக ஏலத்தில் வந்தே ஆக வேண்டும்.
இதன் மூலம் ஏலத்தில் போட்டி போட்டு சிஎஸ்கே அணி அவரை மீண்டும் எடுக்கலாம். மூன்றாவது வழி ஜடஜாவுக்கு பதில் வேறு வீரரை பெற்றுக் கொள்ளுங்கள் என சிஎஸ்கே கூறி விட்டு அதற்கு பதில் சஞ்சு சாம்சனை வாங்கலாம். ஆனால் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் முதல் இரண்டு வழிகள் படி தான் மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.