IPL 2026: அபிஷேக் சர்மா சதம் அடித்ததும் உற்சாகத்தில் காவ்யா மாறன் செய்த செயல்.. கொண்டாடிய ரசிகர்கள்
ஹைதராபாத்: 2026 ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. உலக டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் அதிரடி சதமே இந்த சிறப்பான வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் சதம் அடித்த போது காவ்யா மாறன் அதை கொண்டாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ஹெட் 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். நிதிஷ் ராணா, லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ் என அனைவரது பந்துவீச்சையும் அவர் விட்டுவைக்கவில்லை.

வெறும் 25 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 47 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். மொத்தம் 68 பந்துகளை சந்தித்த அவர் 10 சிக்சர்கள் உட்பட 135 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அடுத்து வந்த கேப்டன் இஷான் கிஷன் 25 ரன்கள் எடுத்து நல்ல ஒத்துழைப்பு தந்தார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் களமிறங்கிய கிளாசென் வெறும் 13 பந்துகளில் 37 ரன்கள் விளாச, ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
அபிஷேக் சர்மா சதம் அடித்த தருணத்தில், மைதானத்தில் ஆட்டத்தை நேரில் கண்டுகளித்த அவரது தந்தை ராஜ்குமார் சர்மா பெருமையுடன் எழுந்து நின்று கைதட்டினார். ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஒரு குழந்தையை போல துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.அந்த காணொளி பின்னர் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
243 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல் கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறுகையில், "அபிஷேக் சர்மாவை ரன் அவுட் செய்ய கிடைத்த ஒரு சுலபமான வாய்ப்பை கே.எல்.ராகுல் நழுவவிட்டார். அதேபோல, அவர் கொடுத்த ஒரு எளிமையான கேட்ச் வாய்ப்பையும் பதும் நிசங்கா கோட்டைவிட்டார். அந்த இரண்டு வாய்ப்புகளையும் நாங்கள் சரியாக பிடித்து இருந்தால், அவர் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்திருக்கவே மாட்டார். பீல்டிங் சொதப்பல்களுக்கு நாங்கள் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளோம். இருப்பினும் இதை ஒரு மோசமான நாளாக கருதி மறந்துவிட வேண்டியதுதான்," என வேதனையுடன் தெரிவித்தார்.
ஆட்டநாயகன் விருது வென்ற அபிஷேக் சர்மா கூறுகையில், "2024 ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணியில் உருவாக்கப்பட்ட சூழ்நிலைதான் எனது ஆட்டத்தை முழுமையாக மாற்றியது. பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி மற்றும் அப்போதைய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இளம் வீரர்களுக்கு அளித்த முழு சுதந்திரமே எனது இந்த அதிரடிக்கு காரணம்," என தெரிவித்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் இஷான் கிஷன் பேசுகையில், "ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினோம். 200 ரன்களுக்கு மேல் குவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications