IPL 2026: டாப் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் இவங்க தான்.. முன்னாள் வீரர் ஆகாஷ் கருத்து
மும்பை: ஐபிஎல் 2026ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) பெற்ற வெற்றிக்குப் பிறகு, ஆகாஷ் சோப்ரா கார்த்திக் தியாகியின் சிறப்பான பந்துவீச்சைப் பாராட்டினார்.டெல்லியில் நடந்த ஐபிஎல் 2026ன் 51வது போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் 142/8 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.
இதில் தியாகி 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனில் 140 கி.மீ வேகத்திற்கு மேல் பந்துவீச்சில் ககிசோ ரபாடா, ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தியாகி உள்ளார். தியாகியின் வேகத்தை புள்ளிவிவரங்களுடன் சோப்ரா விளக்கினார். "140 கி.மீ வேகத்திற்கு மேல் பந்துவீசிய டாப் ஐந்து பந்துவீச்சாளர்களின் சதவீதத்தைப் பார்த்தால், ககிசோ ரபாடா முதலிடத்திலும், ஜோஃப்ரா ஆர்ச்சர் அடுத்த இடத்திலும் உள்ளனர்.

கார்த்திக் தியாகி மூன்றாவது இடத்தில் உள்ளார். 140 கி.மீக்கும் மேல் சராசரி வேகத்தில் பந்துவீசியவர்களில் இவர் இந்த ஐபிஎல் தொடரின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்," என்று அவர் குறிப்பிட்டார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான தியாகி, போட்டியில் முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், கடைசி ஓவர்களில் சிக்கனமாக பந்துவீசியதாகவும் சோப்ரா பாராட்டினார்.
"இவர்தான் இந்த அணியில் சிறந்த இந்தியப் பந்துவீச்சாளர். இவரது பெயர் டாப் ஐந்தில் உள்ளது. கடைசி ஓவரில் மூன்று அல்லது நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார், மிகச்சிறப்பாக பந்துவீசினார். இவரது கம்பேக் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
டெல்லிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தாவுக்கு முதல் திருப்புமுனையை கார்த்திக் தியாகி ஏற்படுத்தினார். அவர் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த கே.எல். ராகுலை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர், இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த அசுதோஷ் சர்மாவை வெளியேற்றி, மூன்று ரன்கள் மட்டுமே வழங்கினார்.
டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக கொல்கத்தா, 143 ரன்கள் இலக்கை 34 பந்துகள் மீதமிருக்க எட்டு விக்கெட் வித்தியாசத்தில் எட்டி அபார வெற்றி பெற்றது. பின் ஆலனின் அதிரடி சதமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என ஆகாஷ் சோப்ரா அதே வீடியோவில் பாராட்டினார்.
குறைந்த இலக்கை துரத்தும் போது பின் ஆலன் அடித்த இந்த சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என ஆகாஷ் சோப்ரா கூறினார். "பின்னர் பின் ஆலனின் புயல் வீசியது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நீங்கள் 147 ரன்கள் எடுத்தீர்கள், அதிலும் தனியாளாக இவரே 100 ரன்கள் எடுத்தார். சதம் அடிக்க இதுவே மிகக் குறைந்த ஸ்கோரைக் கொண்ட போட்டி," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ரன் சேஸிங்கில், பொதுவாக சதம் அடிப்பதில்லை. சதம் அடிப்பதென்பது மிக அரிதானது. மேலும் 142 ரன் இலக்கைத் துரத்தும் போது சதம் எப்போது அடிக்கப்படும்? ஆனால் இவர் அதைச் செய்து காட்டினார்," என சோப்ரா ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார்.
விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான பின் ஆலன், டெல்லி பந்துவீச்சாளர்களின் அச்சுறுத்தல்களை தகர்த்தெறிந்து சிறப்பாக எதிர்கொண்டதாக சோப்ரா விளக்கினார். மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் 200 ஸ்ட்ரைக் ரேட்டிலும், விப்ராஜ் நிகாம் பந்துவீச்சில் 330 ஸ்ட்ரைக் ரேட்டிலும், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 280 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ரன்களை குவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
பின் ஆலன் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் அடித்து, கொல்கத்தாவுக்கு வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து வீரர் இவர், கேமரூன் கிரீனுடன் இணைந்து ஆட்டமிழக்காத 116 ரன்கள் கொண்ட மூன்றாவது விக்கெட் கூட்டணியை அமைத்தார். இதில் கிரீன் 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்து தனது பங்களிப்பைச் செய்தார்.


Click it and Unblock the Notifications

