மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ரஸில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான ஆண்ட்ரே ரஸில், கடந்த 11 ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ரே ரஸில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
2012 மற்றும் 13ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக ஆண்ட்ரே ரஸில் அறிமுகமானார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 140 ஆட்டங்களில் விளையாடி பேட்டிங்கில் 2651 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 174 என்று அளவில் உள்ளது. ஐபிஎல் தொடரில் 223 சிக்சர்களையும் அவர் அடித்திருக்கின்றார்.

அதேபோன்று பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக ஆண்ட்ரே ரஸில் இருந்திருக்கிறார்.இதுவரை 140 போட்டிகளில் விளையாடி 123 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார். கடந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஆண்ட்ரே ரஸில் ஏற்படுத்தாத நிலையில் அவர் கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், ஐபிஎல் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகின்றேன். கடந்த 12 சீசன்களும் எனக்கு நல்ல நினைவுகளை கொடுத்திருக்கின்றது. கொல்கத்தா அணியில் இருந்து எனக்கு நல்ல அன்பு கிடைத்திருக்கிறது.
நாங்கள் ஒரு குடும்பமாகவே இருந்திருக்கின்றோம். ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் உலகம் முழுவதும் நடைபெறும் மற்ற டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவேன்.
ஆனால் இந்த ஓய்வு முடிவில் ஒரு சிறந்த விஷயம் இருக்கின்றது. நான் கொல்கத்தா அணியை விட்டு செல்ல மாட்டேன்.
என்னை நீங்கள் வரும் ஐபிஎல் சீசனில் புதிய ஒரு ரோலில் பார்க்கலாம். ஆம், நான் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கின்றேன். இது எனக்கு ஒரு புதிய அத்தியாயமாகும்.ஒரு பவரான பயிற்சியாளரை நீங்கள் பார்ப்பீர்கள் என்று ஆண்ட்ரே ரஸில் கூறியுள்ளார். கொல்கத்தா அணிக்காக 2014 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஆண்ட்ரே ரஸில் கோப்பையை வென்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.