IPL 2026: பேட், ஹெல்மட்டை தூக்கி எறிவதா? ஃபீல்டிங்கை தடுத்ததாக அவுட் வழங்கிய அங்கிரிஷ்க்கு அபராதம்
மும்பை: ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு அவரது போட்டி சம்பளத்தில் 20 சதவீதமும், ஒரு தகுதி நீக்கப் புள்ளியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஃபில்டிங்கை தடுத்த குற்றத்திற்காக , அவுட் ஆன பிறகு ஆத்திரத்துடன் பேட் மற்றும் ஹெல்மட்டை துககி எறிந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது இச்சம்பவம் அரங்கேறியது. கொல்கத்தா இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில், 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்த ரகுவன்ஷி 'பந்தை தடுத்தார் என்ற புகாருக்காக அவுட் ஆனார். இது உடனடியாக பெரிய விவாதத்தை கிளப்பியது.

பிரின்ஸ் யாதவின் பந்தை அடித்தபின் ரன்னுக்கு ஓடிய ரகுவன்ஷி, சக வீரர் கேமரூன் கிரீன் ஓட மறுத்ததால், மீண்டும் கிரிஸ்க்கு திரும்பினார். அப்போது, தனது ஓடும் பாதையை மாற்றிக்கொண்டதால், வீசப்பட்ட பந்து அவர் மீது பட்டது. ரிஷப் பந்த் மேல்முறையிட, மூன்றாவது நடுவர் ரோகன் பண்டிட், பந்தைத் தடுக்கும் நோக்கத்துடன் ரகுவன்ஷி வேண்டுமென்றே பாதை மாறியதால் அவுட் எனத் தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பால் அதிருப்தியடைந்த ரகுவன்ஷி, கோபத்துடன் பெவிலியன் திரும்பினார். அவரது வெளியேற்றம் கொல்கத்தா டக்-அவுட்டிலும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. பயிற்சியாளர் குழுவினரும் போட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் ஐபிஎல் நிர்வாகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில், "அங்கிரிஷ் ரகுவன்ஷி, பேட்டர் & விக்கெட் கீப்பர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடந்த 38வது போட்டியில், ஐபிஎல் வீரர்கள் மற்றும் அணி அதிகாரிகளுக்கான நடத்தை விதிமுறைகளின் லெவல் 1-ஐ மீறியதற்காக, அவரது போட்டி சம்பளத்தில் 20% அபராதமும், ஒரு தகுதி நீக்கப் புள்ளியும் குவித்துள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ரகுவன்ஷி ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ மீறியதாகக் கண்டறியப்பட்டது, இது 'போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடை, மைதான உபகரணங்கள் அல்லது பொருத்துதல்களை துஷ்பிரயோகம் செய்வது' தொடர்பானது," என விளக்கப்பட்டது.
"ஐந்தாவது ஓவரில், 'பந்தை தடுத்தார்’ என அவுட் கொடுக்கப்பட்ட பிறகு, ரகுவன்ஷி தனது பேட்டால் பவுண்டரி குஷனை ஆக்ரோஷமாக அடித்ததோடு, தனது ஹெல்மெட்டையும் டக்-அவுட்டிற்குள் அதேபோன்று எறிந்தார். ரகுவன்ஷி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, போட்டி நடுவரின் தண்டனையை ஏற்றுக்கொண்டார்," என அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

