IPL 2026- KKR அணி கண்டெடுத்த சொக்கத்தங்கம்.. கம்பீர், உத்தப்பாவுக்கு பிறகு ரகுவன்ஷி மாபெரும் சாதனை
கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அன்க்ரிஷ் ரகுவன்ஷி, நடந்து வரும் ஐபிஎல் 2026 சீசனில் வரலாறு படைத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். இந்த சிறப்பான ஆட்டம், ரகுவன்ஷியை ஒரு ஐபிஎல் சீசனில் ஐந்து அரை சதங்கள் அடித்த மூன்றாவது KKR வீரராக உயர்த்தியுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அஜிங்க்ய ரஹானே தலைமையிலான KKR அணி தங்களது 12வது லீக் போட்டியில் ரகுவன்ஷி இந்தச் சாதனையைப் படைத்தார். 44 பந்துகளைச் சந்தித்த அவர், தனது 82 ரன்கள் இன்னிங்ஸில் 4 பவுண்டரிகளையும், 7 பிரம்மாண்டமான சிக்ஸர்களையும் விளாசினார்.

இந்த ஆட்டம், சீசனில் அவரது அற்புதமான பேட்டிங்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ரகுவன்ஷி அடித்த அரை சதம், நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது ஐந்தாவது 50+ ஸ்கோர் ஆகும்.
இதன்மூலம், கௌதம் கம்பீர் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்குப் பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒரு ஐபிஎல் சீசனில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அரை சதங்களை அடித்த மூன்றாவது வீரராக அவர் உயர்ந்துள்ளார். நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் KKR அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அன்க்ரிஷ் ரகுவன்ஷி திகழ்கிறார் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இதே போன்று ஐபிஎல் 2026 ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் கேமரன் கிரீன் 28 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். இதே போன்று தொடக்க வீரர் ஃபின் ஆலன் 38 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்கள் அடங்கும். 20 ஓவத் முடிவில், கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications