கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் 2024 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட் போன்ற நட்சத்திர வீரர்களை தக்கவைக்கத் தவறியது மிகப்பெரிய தவறு என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கடுமையாக விமர்சித்துள்ளார். வீரர்களை தக்கவைப்பதில் கொல்கத்தா அணி நிலையான தன்மையைக் காட்டவில்லை என்றும், இப்படியே போனால் அவர்களை சாம்பியன் பட்டம் வெல்லும் அணியாக கருத முடியாது என்றும் அவர் சாடியுள்ளார்.
இது குறித்து கும்ப்ளே கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 3வது முறையாக கோப்பையை வென்றபோது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட் ஆகியோர் மிக முக்கிய காரணமாக இருந்தனர். ஆனால், அவர்களை வெளியேற்றியது அந்த அணியின் நிர்வாகம் எடுத்த தவறான முடிவாகும். ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவம் கொண்ட கேப்டனை கையில் வைத்திருப்பது எந்த ஒரு அணிக்கும் கூடுதல் பலம். ஆனால் அந்த பலத்தை கொல்கத்தா அணி தானாகவே இழந்துவிட்டது. அஜிங்க்யா ரஹானே அனுபவம் வாய்ந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவர் கேப்டனாக இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு" என்று கூறினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து பாராட்டிய கும்ப்ளே, "ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட கேப்டன். ஒரு அணியில் கோப்பையை வென்றுவிட்டு, புதிய சூழல் கொண்ட மற்றொரு அணிக்குச் (பஞ்சாப் கிங்ஸ்) சென்று, அங்கேயும் முதல் சீசனிலேயே இறுதிப்போட்டி வரை அழைத்துச் செல்வது சாதாரண விஷயம் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத பஞ்சாப் கிங்ஸ் அணியை, ஸ்ரேயாஸ் தனது சிறப்பான தலைமையின் கீழ் இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றது அவரது திறமைக்கு சான்று. அவர் எப்போதும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்" என்று புகழ்ந்தார் கும்ப்ளே.

கொல்கத்தா அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வருகின்றன. கொல்கத்தா அணி நிர்வாகம் ஸ்ரேயாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த தாமதமானது ஒரு காரணம் என்றும், அவர் கேட்ட அதிகப்படியான சம்பளத்தை கொடுக்க நிர்வாகம் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. என்னதான் காரணங்கள் இருந்தாலும், முக்கிய வீரர்களை தக்கவைக்கத் தவறும் வரை கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்லும் பட்டியலில் முன்னணியில் இருக்க முடியாது என்பதே நிதர்சனம்.
