திலக் வர்மா பற்றி வார்த்தையை விட்ட அர்ஷ்தீப் சிங்.. தடை விதிக்க வேண்டும் என கொதித்த சிவராமகிருஷ்ணன்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், சக வீரரை நிறத்தை வைத்து மிக மோசமாக கேலி செய்த விவகாரம் தற்போது பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. நிறவெறி விமர்சனங்கள் உலகெங்கும் கடும் கண்டனங்களை பெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அந்த வீரருக்கு நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து தடை விதிக்க வேண்டும் என முன்னாள் வீரர் லக்ஷ்மன்சிவராமகிருஷ்ணன் போர்க்கொடி தூக்கியுள்ளார். பிசிசிஐ இதில் தலையிடாவிட்டால் பெரிய உண்மைகளை வெளியிடுவேன் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
தரம்சாலாவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டிக்கு முன்பாக, பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது ஸ்னாப்சாட் பக்கத்தில் கடந்த மே 14 அன்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் மும்பை அணி வீரர் திலக் வர்மாவை பார்த்து, "ஓய் அந்தரே, சன்ஸ்கிரீன் போட்டியா?" என அர்ஷ்தீப் கேட்கிறார். அதாவது "ஏய் கருப்பனே, சன்ஸ்கிரீன் போட்டு இருக்கியா" என மிகவும் தரக்குறைவாகவும் கேலியாகவும் அவர் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, அருகில் நின்ற நமன் திர் என்பவரைப் பார்த்து இவர்தான் பஞ்சாபின் நிஜமான வெளிச்சம் என திலக் வர்மாவை மட்டம் தட்டியுள்ளார்.

நண்பர்களுக்குள் விளையாட்டாகத் தொடங்கிய இந்த விஷயம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கொதித்தெழுந்துள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன், அர்ஷ்தீப் சிங்கிற்கு நடப்பு தொடர் முழுவதிலும் விளையாட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது வெறும் விளையாட்டு அல்ல, இது ஒரு தொழில் என அவர் சாடியுள்ளார். திலக் வர்மா தற்போதுதான் கிரிக்கெட்டில் வளர்ந்து வருவதால் அவரால் உடனடியாக எதிர்த்துப் பேச முடியாது என்றும் சிவராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிசிசிஐ இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்படி எடுத்தால் தனது கிரிக்கெட் காலத்தில் தன்னை நிறவெறியோடு விமர்சித்தவர்களின் பெயர்களை வெளியிடுவேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அர்ஷ்தீப் சிங் ஏற்கனவே சக வீரர் சாஹல் தொடர்பான ஒரு சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில், பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட 7 பக்க சமூக வலைத்தள கட்டுப்பாட்டு விதிமுறைகளை அவர் அப்பட்டமாக மீறியுள்ளார். 2026 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அர்ஷ்தீப் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா? என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
