சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கின் வெற்றிக்கு முழு காரணமும் தோனி தான் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2009 முதல் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் செயல்பட்டு வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஆனால், 2024ல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்ற பின் சிஎஸ்கே அணி தொடர்ந்து திணறி வருகிறது. 2026 ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விகள் குறித்து முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தோனி கேப்டனாக இல்லாமல் பிளெமிங் வேறு எந்த அணியிலும் வெற்றி பெற்றதில்லை. பிளெமிங்கின் வெற்றி முழுமையாக தோனியை மட்டுமே சார்ந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. நவீன கிரிக்கெட் ஆட்டம் வேகமாக மாறி வருகிறது. வீரர்களின் தகுதி மற்றும் திறன் எப்படி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறதோ, அதேபோல பயிற்சியாளரின் திறமையும் சோதிக்கப்பட வேண்டும். தற்போதைய அதிரடி ஆட்டத்திற்கு ஏற்ப செயல்படும் மனநிலை பிளெமிங்கிற்கு இல்லை. அவர் நவீன கிரிக்கெட்டை விட 5 படிகள் பின்தங்கி உள்ளார்." இவ்வாறு சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்ம் குறித்தும் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். ருதுராஜ் இதுவரை 3 போட்டிகளில் 41 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் உள்ளார். அதிரடியாக பவுண்டரி, சிக்சர் அடிக்க பெரிய அனுபவம் தேவையில்லை. ஆனால் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்த பந்துவீச்சில் அதிக அனுபவம் வேண்டும். அது தற்போதைய சென்னை அணியின் பந்துவீச்சாளர்களிடம் இல்லை.

கேப்டனாக ருதுராஜ் சிறந்து விளங்க, அவர் உடனடியாக அதிரடியாக ரன் குவிக்க தொடங்க வேண்டும். தனி ஆளாக நின்று போட்டிகளை வென்று கொடுப்பது மட்டுமே ஒரு கேப்டனாக அவருக்கு கூடுதல் நம்பிக்கையைத் தரும் எனவும் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார். முதல் வெற்றியை தேடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த லீக் போட்டியில் சனிக்கிழமை டில்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.