IPL 2026: நான் ருதுராஜ் இடத்தில் இருந்தால் கவலையே பட மாட்டேன்.. ஏன் தெரியுமா? அஸ்வின் கருத்து
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் 2026 சீசனில் மீண்டும் தனது பேட்டிங் ஃபார்மை விரைவாகப் பெறுவார் என முன்னாள் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கெய்க்வாட் தனது பேட்டிங்கில் சிறிய தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதே சமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பென்ச் வீரர்களிடமிருந்து புதிய திறன் தேவை என்றும் அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியை கேப்டனாக கெய்க்வாட் பெற்றுத்தந்த பிறகு, அஸ்வின் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் கெய்க்வாட் ரன் குவிக்கத் திணறி வரும் நிலையில், கேப்டன் என்ற முறையில் கிடைக்கும் வெற்றிகள் அவரது மீதான அழுத்தத்தைக் குறைத்து, போட்டியில் நிலைபெற உதவும் என்று அஷ்வின் குறிப்பிட்டுள்ளார்.

ஜியோஸ்டாரில் பேசிய அஷ்வின், "கேப்டனாக கிடைத்த இந்த இரண்டு வெற்றிகள், அவர் இந்தத் தொடரில் எளிதாகப் பயணிக்க உதவும். உண்மையைச் சொல்லப்போனால், நான் டக்அவுட்டில் அமர்ந்திருந்தாலோ அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டாக இருந்தாலோ பெரிய அளவில் கவலைப்பட மாட்டேன். டி20 என்பது தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டிய விளையாட்டு. நான் ஒரு சிறிய விஷயத்தை மட்டுமே கேட்பேன்," என்று கூறினார்.
மற்ற சிஎஸ்கே பேட்டர்களுடன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அணுகுமுறையை ஒப்பிட்டு, ஒரு நுட்பமான தொழில்நுட்ப மாற்றத்தை அஷ்வின் சுட்டிக்காட்டினார். "ஆயுஷ் மத்ரே அல்லது சஞ்சு சாம்சனை நீங்கள் பார்த்தால், அவர்கள் பந்தைத் தரையில் இறக்கி அடித்தபடி சரியான ஷாட் தேர்வுகளை மேற்கொண்டனர். ஆனால், ருதுராஜ் பந்துவீசுபவர் லைனைத் தாண்டி சற்று அதிகமாகச் சென்று, சீக்கிரமே அவுட் ஆகிறார்.
அவர் இன்னிங்ஸின் தொடக்கத்தில் சற்று நிதானமாகச் செயல்பட்டு, பந்தின் நேரத்தை அறிந்து (டைமிங்), தரையில் பந்துகளை அதிகமாக விளையாடினால் அது அவருக்குச் சிறப்பாக அமையும்," என்று அவர் விளக்கினார்.கெய்க்வாட் விரைவில் நன்றாக விளையாடுவார் என்று அஷ்வின் உறுதியளித்தாலும், நடப்பு சீசனின் தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பல அறிவுலைகளை வழங்கினார்.
"பதிரானா களமிறங்கி உடனடியாக எல்லாவற்றையும் மாற்றுவார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். சில வருடங்களுக்கு முன், 2021-ல், கேகேஆர் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. போட்டி மீண்டும் தொடங்கப்பட வேண்டியிருந்தது, அவர்கள் மீண்டு வந்து, தொடர்ச்சியாக வெற்றி பெற்று, ஒரு வேகத்தைப் பிடித்தனர். அனைத்தும் மாறியது. அவர்களுக்கு என்ன அதைப் புரட்டிப்போட்டது? வெங்கடேஷ் ஐயர் போன்ற ஒருவரிடம் இருந்து கிடைத்த புதிய ஆற்றல்," என்று அவர் தெரிவித்தார்.
அதே போன்ற ஒரு வியூகத்தை முன்வைத்து, அணியில் புதிய ஆற்றலைச் செலுத்துவதன் முக்கியத்துவத்தை அஷ்வின் வலியுறுத்தினார். பயன்படுத்தப்படாத அணியின் பிற வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். "அவர்களிடம் தேஜஸ்வி தஹியா மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சௌரப் துபே போன்ற வீரர்கள் டக்அவுட்டில் உள்ளனர்.அணியில் ஒரு புதிய புத்துணர்ச்சி உள்ளது, எனவே அத்தகைய யாராவது வந்து அணியைப் பலப்படுத்தினால் அவர்களின் வாய்ப்புகள் புத்துயிர் பெறும். ஆனால் இந்த ஆண்டு கேகேஆர்-க்கு இது எளிதாக இருக்காது," என்று அவர் அஸ்வின் கூறினார்.


Click it and Unblock the Notifications