IPL 2026: இளம் வீரர்கள் மீது சுமையை ஏற்றாதீர்கள்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு அஸ்வின் கோரிக்கை
சென்னை: ஐபிஎல் 2026 தொடரின் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதும் ஆட்டத்திற்கு முன்னதாக, தனது பழைய அணி குறித்து முக்கியக் கருத்துகளை அஸ்வின் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது. காயம் காரணமாக முன்னாள் கேப்டன் தோனி ஆரம்பத்தில் இரண்டு வாரங்களுக்குப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
முதல் ஆட்டத்தில் பங்கேற்காத அவர், எதிர்பார்த்ததைவிட விரைவாக வலைப் பயிற்சியில் கலந்து கொண்டார். எனினும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் பங்கேற்க இன்னும் உறுதியாகவில்லை.ருதுராஜ் கெய்க்வாட் தற்போது அணியை வழிநடத்துகிறார்.

இந்த சூழலில், தோனி, கெய்க்வாட்டை முழுமையாக செயல்பட அனுமதிப்பார் என்றும், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் உடன் இணைந்து சிஎஸ்கே அணியை வழிநடத்த வாய்ப்பு அளிப்பார் என்றும் அஷ்வின் கணித்துள்ளார். இது, தோனி ஓய்வு பெற்ற பிறகு அணியின் எதிர்கால மாற்றத்திற்கு உதவும் எனவும் அவர் கூறினார்.
இது குறித்து பேசிய அஸ்வின், "கெய்க்வாட், ஃபிளெமிங் மற்றும் தோனி ஆகியோரின் உறவுக்கு இடையே என்ன இருக்கிறது என்பதை நம்மில் எவராலும் வெளியில் இருந்து கணிக்க முடியாது. ஃபிளெமிங்கும், கெய்க்வாடும் நிறைய ஆலோசனைகளை செயல்படுத்துகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை, தோனியே ருதுராஜிடம் 'நீங்கள் அணியை வழிநடத்துங்கள், இதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி இருக்கலாம்."
"எதிர்காலத்தில் நீங்கள் தான் அணியை பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று அவர்களிடம் சொல்லி இருக்கலாம். தோனியின் திட்டம் என்ன, தனது ஆட்டக்காரர் வாழ்க்கைக்குப் பிறகு அவர் என்ன செய்வார் என்பது யாருக்கும் தெரியாது. இந்தச் சூழ்நிலையை நான் மும்பை இந்தியன்ஸ் அணியோடு ஒப்பிடுவேன். ஒரு கட்டத்தில், அவர்கள் ரிக்கி பாண்டிங்கை கேப்டனாக்கினார்கள். அதே ஆண்டில், அவரே 'இது சரியாக இல்லை' என்று உணர்ந்து, ரோஹித்தை கேப்டனாகப் பரிந்துரைத்திருக்கலாம். அந்த தகவல் பரிமாற்றமும், அங்கே இருந்தது."
"தோனியின் அனுபவத்தை யாரும் ஈடுசெய்ய முடியாது. நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 99% வெற்றிக்கு தோனியே காரணம். இதன் பலன் எல்லோருக்கும் முன்னால் உள்ளது. அவர்கள் தோனியைத் தொடர்ந்து அணியில் வைத்திருக்க வேண்டும், அவரை நன்றாகப் பயன்படுத்தி, ஒன்றாக முடிவுகளை எடுத்தால், எல்லாம் எளிதாகிவிடும்" என்றும் அஸ்வின் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
"ஐந்து கோப்பைகள் மற்றும் மிகப்பெரிய பாரம்பரியம் என்ற சுமை புதிய வீரர்கள் மீது திணிக்கப்படக் கூடாது, அது அவர்களிடம் இல்லை. இந்தப் புதிய வீரர்கள் தவறுகள் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். அணியின் பாரம்பரியம் அவர்களின் பிரச்சனை இல்லை. அவர்களால் அந்தச் சுமையைத் சுமக்க முடியாது. அவர்கள் விளையாட்டை அனுபவிக்க அனுமதிக்கப்பட வேண்டும். விளையாட்டில் மோசமான சீசன்கள் இருக்கவே கூடாது என்பது எப்படி சாத்தியம்?"
"கடந்த ஐந்து வருடங்களில் கூட இரண்டு கோப்பைகளை வென்றிருக்கிறார்கள்தானே? ஏன் இந்தப் புதிய வீரர்கள் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளின் சுமையைத் தாங்க வேண்டும்? பலர் இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்" என்று அஸ்வின் வலியுறுத்தினார்.2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறவில்லை. முந்தைய சீசனில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தையும் பிடித்தது.
ஐபிஎல் 2026 முதல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தச் சுமை மற்றும் அழுத்தம் குறித்துப் பேசிய அஸ்வின், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யாராவது சூர்யவன்ஷியிடம் போய், 'நாங்கள் 2008 முதல் வெல்லாததால், நீங்கள் எங்களுக்காக வெல்ல வேண்டும்' என்று சொன்னால், அவரது பேட் பேசுமா? யாராவது அவரிடம் அப்படிச் சொல்வார்களா? அவனால் ரன் சேர்க்க முடியாது."
"இறுதியில், நீங்கள் விளையாட்டை அனுபவிக்க வேண்டும். மகிழ்ச்சி இல்லாவிட்டால், அது மிகவும் கடினம். தேவையற்ற அழுத்தம் இருக்கக் கூடாது. ஒரு சீசன் முழுவதுமே தோற்றாலும். அவர்கள் கற்றுக்கொண்டு சிறப்பாக மாறுவார்கள். நீங்கள் தோற்கவில்லை என்றால், வெற்றியின் மகிழ்ச்சி என்ன? தோற்று, தோல்வியை ஏற்றுக்கொள்பவன்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும்" என்றார்.பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய சிஎஸ்கே ஆர்வமாக உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டு வர சிஸ்கே உத்வேகத்துடன் களமிறங்குவார்கள்.


Click it and Unblock the Notifications