பெங்களூரு: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ், ஆர்சிபி மோதும் இந்த ஆட்டத்தில் முதல் முறையாக 300 ரன்கள் என்ற ஸ்கோர் பதிவாக அதிக வாய்ப்புள்ளதாகக் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். சனிக்கிழமை அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பரப்பரான மோதலுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த சீசன் தொடங்குகிறது.
இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஐபிஎல் வரலாற்றில் ரன் குவிப்பு அபரிமிதமாக அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 15 அதிகபட்ச ஸ்கோர்களில், 13 ஸ்கோர்கள் 2023 ஆம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கடந்த இரு சீசன்களில் நான்கு முறை 270 ரன்களுக்கு மேல் குவித்து, 300 ரன்கள் என்ற இலக்கை அடிக்கடி நெருங்கியுள்ளது.

எனினும், போட்டியின் அதிகபட்ச ஸ்கோர் இன்னும் 287 ரன்களாகவே நீடிக்கிறது, இது 300 ரன்களை எட்ட சற்று குறைவாகும். 2026 டி20 உலகக் கோப்பையில் 250+ ரன்கள் சாதாரணமாகக் குவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரிலும் இதே ரன் வேகம் தொடரலாம். டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள் ஐந்து முறை கடந்துள்ளன. சமீபத்தில், 2025-26 சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியில் பஞ்சாப் அணி 310/5 ரன்கள் சேர்த்தது.

ஐபிஎல் தொடரிலும் முதல் 300 ரன் ஸ்கோர் பதிவாக அதிக தூரமில்லை என்றும், தொடக்க ஆட்டமே இதற்கு யதார்த்தமான வாய்ப்பை வழங்கும் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கருதுகிறார்."300 ரன்கள் இலக்கு நிச்சயம் சாத்தியமாகும். இந்த முறை 300 ரன்கள் என்ற மைல்கல் எட்டப்படும் என்ற உள்ளுணர்வு எனக்கு உள்ளது. நான் பேட்டிங், பந்துவீச்சு வரிசைகளைக் கவனித்தேன். சில பந்துவீச்சுப் படையின் பலம் குறைவாக உள்ளது. எனவே, ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தால் 300 ரன்கள் குவிக்க வாய்ப்புகள் உள்ளன," என்று தனது யூடியூப் சேனலில் அஸ்வின் தெரிவித்தார்.
கடந்த 2024 சீசனில், இதே சின்னசாமி மைதானத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதிய ஆட்டத்தில் தான் ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோர் (287) பதிவானது. அப்போட்டியில், டிராவிஸ் ஹெட் சதம் அடிக்க, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆர்சிபியை 263-ஐ எட்டவைத்தது. 40 ஓவர்களில் 549 ரன்கள் குவிக்கப்பட்டு, இது டி20 வரலாற்றின் அதிகபட்ச மொத்த ரன் எண்ணிக்கை இதுவே.
ஆரம்ப ஆட்டம் அதிக ரன் கொண்டதாக அமையும் என அஸ்வின் கணித்தது, இரு அணிகளின் பந்துவீச்சு பலவீனத்தால்தான். எஸ்ஆர்ஹெச், ஆர்சிபி இரு அணிகளும் தொடர் தொடங்கும் முன்பே பந்துவீச்சு நெருக்கடியில் உள்ளன. எஸ்ஆர்ஹெச் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஆர்சிபி பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அணியில் இணைந்த போதும், விளையாட அனுமதி பெறவில்லை.அதுமட்டுமின்றி, யாஷ் தயாள் மற்றும் நுவான் துஷாரா ஆகியோரும் ஆர்சிபி அணியில் இல்லை. இதனால் துவக்கத்திலேயே அவர்கள் இரண்டாம் நிலை பந்துவீச்சை நம்பியிருக்க நேரிடும்.
"சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு பேட் கம்மின்ஸ் எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஆர்சிபிக்கு ஜோஷ் ஹேசில்வுட் இன்னும் அதிகம் தேவை. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் பெரிதும் வலுவான நிலையில் உள்ளது. சிறிது சீம் மற்றும் ஸ்விங் பவுலிங் இருந்தால் கூட, ஜோஷ் ஹேசில்வுட் சிறப்பாகப் பந்துவீசுவார். டெத் ஓவர்களிலும் அவரிடம் இருந்து அனைவரும் கற்றுக்கொள்ளலாம்."
"அவர் அழுத்தத்தின் கீழ் யார்க்கர்கள் மட்டுமே வீசுபவரல்ல, கடினமான லெந்த்கள், யார்க்கர்கள் எனப் பந்தை கலந்து வீசுபவர். இந்த ஆட்டத்திற்கு ஜோஷ் ஹேசில்வுட் இல்லாதது ஆர்சிபிக்கு மிகப்பெரிய இழப்பு," என்று அஸ்வின் குறிப்பிட்டார்.ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர், ஜோஷ் ஹேசில்வுட் தொடக்க ஆட்டத்தில் விளையாடப் போவதில்லை என போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.