மும்பை: ஐபிஎல் 2026 மினி ஏலம் அபுதாபியில் டிசம்பர் 16 அன்று நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 359 வீரர்கள் களமிறங்க உள்ளனர். முன்னதாக, 1,005 வீரர்களின் ஆரம்பப் பட்டியல் 350 ஆகக் குறைக்கப்பட்டது. பின்னர் 9 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, இறுதி எண்ணிக்கை 359 ஆனது.
ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் இந்த ஏலத்தின் நட்சத்திர வீரராக இடம்பெற்றுள்ளார். இவரே அதிக விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டராக இருப்பது கிரீனுக்குப் பெரும் பலம்.

இந்த நிலையில், அதிகபட்ச ஏலத்தொகைக்கு செல்ல அவர் ஒரு சூப்பர் திட்டத்தை கையாண்டுள்ளார்.கிரீன், ஆல்-ரவுண்டராக இருந்தும், பேட்ஸ்மேன்கள் பிரிவில் தனது பெயரை பதிவு செய்தார். ஏனெனில் மினி ஏலத்தில் முதலில் பேட்ஸ்மேன்கள் தான் ஏலம் எடுக்கப்படுவார்கள்.
முதலில், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால், அவரால் பந்துவீச முடியாது என்றும், இதனால் தான் பேட்ஸ்மேன் என்ற பெயரில் தனது பெயரை பதிவு செய்துள்ளார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு காரணமே வேறு, இரண்டாம் சுற்றில் கிரீன் வந்தால், குறைந்த பட்ஜெட் கொண்ட அணிகள் அவரை வாங்க இயலாது என்பதால் இந்த உத்தியைக் கையாண்டுள்ளார் என தெரிகிறது.
கிரீனுடன், முதல் சுற்று பேட்ஸ்மேன்களில் நியூசிலாந்து டெவோன் கான்வே, ஆஸ்திரேலிய ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், தென்னாப்பிரிக்க டேவிட் மில்லர், இந்திய சர்பராஸ் கான், பிருத்வி ஷா ஆகியோர் உள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் ₹2 கோடி விலையும்,. இந்திய வீரர்கள் ₹75 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் உள்ளனர்.
கிரீன் 2023 இல் மும்பை இந்தியன்ஸ், 2024 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். 29 போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்களுடன் 153.69 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 707 ரன்கள் எடுத்தார். மேலும், 9.07 எகானமி ரேட்டில் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
கிரீனை கொல்கத்தா, சிஎஸ்கே அணிகள் போட்டி போட்டு வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 9 வீரர்களில், அறிமுகமாகாத இந்திய பேட்ஸ்மேன் ஸ்வஸ்திக் சிக்காரா முக்கியமானவர். இவர் ஐபிஎல் 2025 இல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்தார்.