சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறாது என்பது தெரிந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தேர்வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை விளையாடிய இளம் வீரர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக இருப்பவர்கள் ஆயுஷ் மத்ரே மற்றும் தென்னாப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரெவிஸ்.
இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி வந்தாலும், 2026 ஐபிஎல் தொடரில் இவர்களை சிஎஸ்கே தக்க வைக்க முடியுமா, விதிப்படி அதற்கான அனுமதி உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இவர்கள் இருவரும் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் அல்ல. ஏற்கனவே, சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியதால், மாற்று வீரர்களாக சிஎஸ்கே அணியில் தேர்வு செய்யப்பட்டவர்கள். எனவே இவர்களை 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணியில் தக்கவைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் விதிப்படி இதுபோன்ற மாற்று வீரர்களையும் ஒரு அணி தக்கவைக்க முடியும். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளது. ஒரு ஐபிஎல் அணியில் அதிகபட்சமாக 25 வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும். அதிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும்.
எனவே ஆயுஷ் மத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸை சிஎஸ்கே தக்கவைக்க நினைத்தால், ஒட்டுமொத்தமாக அணியில் இவர்கள் இருவரையும் சேர்த்து 25 வீரர்கள் மட்டுமே இருப்பதை சிஎஸ்கே அணி உறுதி செய்ய வேண்டும். மேலும் டெவால்ட் பிரெவிஸை அணியில் தக்கவைக்க வேண்டும் என்றால், அவரையும் சேர்த்து மொத்தம் 8 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு விதிகளுமே சிஎஸ்கே அணியால் எளிதாகப் பின்பற்றக்கூடிய விதிகளாகவே இருக்கும். ஏனெனில் எப்படியும் சிஎஸ்கே அணியிலிருந்து பல வீரர்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக நீக்கப்படுவார்கள். எனவே சிறப்பாக விளையாடி வரும் ஆயுஷ் மத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸுக்கு சிஎஸ்கே அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காயம் காரணமாக அணியிலிருந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நீக்கப்பட்டிருக்கும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங் ஆகியோரையும் தக்கவைக்க முடியும். மேலும் ஒரு அணி ஒரு ஆண்டில் வீரர்களுக்கான சம்பளமாக அதிகபட்சமாக 120 கோடி ரூபாய் மட்டுமே செலவிட முடியும். அந்த இலக்குக்குள் இந்த இரண்டு வீரர்களின் சம்பளமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.