சென்னை: ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் வீரர்களான பிரஷாந்த் வீர் மற்றும் கார்த்திக் ஷர்மாவுக்காக மொத்தம் 28.4 கோடி ரூபாய் செலவிட்டது. தலா ₹14.2 கோடி என இந்த பெரிய தொகையை இரு அறிமுகமில்லாத வீரர்களுக்குச் செலவிட்டது. ஐபிஎல் 2025 மூலம் பெற்ற அனுபவ பாடங்களை கருத்தில்கொண்டு, பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், சிஎஸ்கேக்கு புதிய ரூட்டை தேர்வு செய்து இருக்கிறார்.
கடந்த 18 சீசன்களாக சிஎஸ்கேவின் அடையாளமாக இருந்த 'அனுபவமே பிரதானம்' என்ற தாரக மந்திரத்தில் இருந்து விலகி, அணி ஒரு இளசுகளை நோக்கி செல்கிறது. டி20 கிரிக்கெட்டின் வேகமாக மாறி வரும் நிலையில், சிஎஸ்கே அதற்கு ஏற்ப மெதுவாகவே மாறி இருக்கிறது என்பதை தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் அபுதாபியில் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து பேசிய அவர், "ஆட்டம் மாறிக்கொண்டிருக்கும்போது, நாங்களும் அதற்கேற்ப மாறச் சற்றுக் காலதாமதம் செய்திருக்கலாம். மேலும், கடந்த காலச் சாதனைகள் காரணமாக சில யுத்திகளை மாற்றாமல் இருந்தோம்."
"ஆனால், புதிய பாதையை நோக்கி மாற வேண்டும் என்பதை உணர்ந்தோம். கடந்த சீசனின் பாதியில் நாங்கள் செய்த பணிகளே இந்த மாற்றத்தைத் தொடர உதவியது," என்று கூறினார். ஐபிஎல் 2025 தொடரின் பாதியில் இந்த மாற்றம், தொடங்கியது. அப்போது, டிவால்ட் ப்ரெவிஸ், அயூஷ் மகாத்ரே மற்றும் உர்வில் பட்டேல் போன்ற இளம் வீரர்களின் வருகை, தடுமாறிய டாப் ஆர்டருக்குத் தேவையான புத்துணர்ச்சியையும் வேகத்தையும் அளித்தது.
"இவர்கள் டி20 குழந்தைகள். இந்த வடிவத்திலேயே வளர்ந்தவர்கள். இவர்களுக்குப் பயம் என்பதே கிடையாது, சாதாரணமாகத் தங்கள் திறமைகளை இயல்பாக வெளிப்படுத்துவார்கள். சில சமயம் அனுபவமிக்க வீரர்கள் ஆட்டம் எங்கு செல்கிறது என்பதைக் கணிக்க முயற்சிப்பதில் சிக்கிக்கொள்கிறார்கள்."
"ஆட்டம் மேலும் மேலும் வேகமாகும்போது இவர்களது ஆற்றல் மிகவும் ஈர்க்கக்கூடியதாகிறது. இது T20 கிரிக்கெட் நீண்டகாலமாக இருப்பதால் ஏற்பட்ட விளைவு. நாம் எல்லோரும் இதிலிருந்து கற்றுக்கொண்டு வருகிறோம், ஆட்டம் எவ்வளவு வேகமாகிறதோ, அவ்வளவு சிறப்பாக இந்த இளம் வீரர்கள் விளையாடுகிறார்கள்" என்று ஃபிளெமிங் கூறினார்.