சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடியிருக்கும் நிலையில், இப்போதே 2026 ஐபிஎல் தொடருக்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் துவங்கியிருக்கிறது. முதற்கட்டமாக தற்போது இளம் வீரர்களுக்குப் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக, இந்த ஆண்டு சரியாக விளையாடாத வீரர்களை அணியிலிருந்து நீக்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இப்போதே திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஐந்து வீரர்களை அணியிலிருந்து நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த ஐந்து வீரர்கள் யார் என்று பார்க்கலாம்:

விஜய் சங்கர்: 2025 ஐபிஎல் ஏலத்தில் 1.20 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் விஜய் சங்கர். அவர் ஆல்ரவுண்டராக சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மோசமாகச் செயல்பட்டார். 6 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி 118 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அவர் அரை சதம் அடித்த போட்டிகளிலும் நிதானமாக ஆடியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்திருந்தது. அவர் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம் பெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
டெவான் கான்வே: சிஎஸ்கே அணியில் துவக்க வீரராக எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வேவுக்கு அடுத்த ஆண்டு இடம் கிடைக்காது என கூறப்படுகிறது. அவர் 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அப்போது 16 போட்டிகளில் 672 ரன்கள் சேர்த்திருந்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்து, மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 2025 ஐபிஎல் தொடரில் வாங்கியிருந்தது. ஆனால் இந்த முறை அவர் ஏமாற்றத்தை அளித்தார். 3 போட்டிகளில் விளையாடி 94 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ராகுல் திரிபாதி: 2025 ஐபிஎல் ஏலத்தில் 3.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ராகுல் திரிபாதி, பல வாய்ப்புகளைப் பெற்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த ஆண்டு அவர் பல்வேறு பேட்டிங் வரிசைகளில் விளையாடி, வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் நிச்சயமாக அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம் பெற வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபக் ஹூடா: அதேபோல, தீபக் ஹூடா, 2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 1.70 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார். அவரும் இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்து பெரிய ஏமாற்றத்தை அளித்தார். இவரும் அடுத்த ஆண்டு அணியில் இருக்க மாட்டார் எனத் தெரிகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின்: அடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலத்திற்குப் பிறகு இடம் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டின் மிகப்பெரிய ஏமாற்றமளித்த வீரராக அமைந்தார். அவர் 7 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
அவருக்குப் பெரிதும் பழக்கமான சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் அவர் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மற்றொரு முக்கிய காரணம் அவருக்கு அளிக்கப்படும் சம்பளம்தான்.
அவர் 2025 ஐபிஎல் ஏலத்தில் 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார். அத்தனை பெரிய தொகையை அடுத்த ஆண்டும் அவருக்கு அளித்து, அவரை வெளியே அமர வைக்க முடியாது. அவருக்கு அளிக்கும் சம்பளப் பணத்தை வைத்து வேறு வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும். அதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சங்கர், ராகுல் திரிபாதி மற்றும் தீபக் ஹூடா ஆகிய மூவரும் சரியாக விளையாடாததால் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது எனக் கூறப்படுகிறது. இந்த ஐந்து வீரர்கள் நீக்கப்பட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2026 ஏலத்தில் கணிசமான தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.