மும்பை: ஐபிஎல் 2026 மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்தியாவின் முன்னணி டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை, ஏலத்திற்கு முன்னதாக நடப்பதால், சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத திறமையான இந்திய வீரர்கள் பலர் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு, ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்த 5 வீரர்கள் யார் என்பதை தற்போது காணலாம்.
அக்கிப் நபி தார் (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீரின் 29 வயது வேகப்பந்து வீச்சாளர் அக்கிப் நபி, சமீப மாதங்களில் இந்திய கிரிக்கெட்டில் பெரும் கவனம் ஈர்த்தார். ஐபிஎல் 2026 ஏலத்தில் இவர் பெரிய விலை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.சையத் முஷ்டாக் அலி கோப்பையின் எலைட் குரூப் பி பிரிவில், ஏழு போட்டிகளில் வெறும் 7.41 எக்னாமி உடன் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

புதிய பந்தை சிறப்பாக ஸ்விங் செய்யும் திறனும், 36 முதல் தரப் போட்டிகளில் 125 விக்கெட்டுகளை வீழ்த்திய சிறந்த சாதனையும் இவருக்குப் பலம் சேர்க்கிறது.பல ஐபிஎல் அணிகள் இவரைத் தேர்வுப் போட்டிக்கு அழைத்துள்ளன. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைத் தேடும் அணிகளுக்கு, அக்கிப் நபி ஒரு முக்கிய வீரராக ஏலத்தில் வலம் வரலாம்.
கார்த்திக் ஷர்மா (ராஜஸ்தான்):ராஜஸ்தான் அணி இந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டு, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற வலுவான அணிகளைத் தாண்டி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இதற்கு முக்கிய காரணம் 19 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் ஷர்மா தான்.
ஐந்து போட்டிகளில் 160-க்கு அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 133 ரன்கள் குவித்து, நடு வரிசையில் அதிரடியான சிறிய இன்னிங்ஸ்கள் மூலம் கவனம் ஈர்த்தார். இவரது விக்கெட் கீப்பிங் திறனும், டெத் ஓவர்களில் அதிரடி காட்டும் திறனும் பல ஐபிஎல் அணிகளுக்குப் பலனளிக்கும் என்பதால், ஐபிஎல் 2026 ஏலத்தில் இவர் கவனிக்கப்பட வேண்டிய வீரராக இருப்பார்.
துஷார் ரஹேஜா (தமிழ்நாடு): தமிழ்நாட்டின் இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துஷார் ரஹேஜா, ஐபிஎல் 2026 ஏலத்தில் அதிக கவனத்தை ஈர்க்கும் வீரராக இருப்பார்.
நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பையில், தமிழ்நாடு அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஏழு போட்டிகளில் 164 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 151 ரன்கள் குவித்தார். இவர் 2025 தமிழ்நாடு பிரீமியர் லீக்கிலும் 185 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிக ரன்கள் குவித்தவர்.அதிரடியான விக்கெட் கீப்பர்கள் தேவைப்படுவதால், ரஹேஜா பல அணிகளின் தேர்வுப் பட்டியலில் நிச்சயம் இடம் பெறுவார்.
அன்மோல்பிரீத் சிங் (பஞ்சாப்): 27 வயதான அன்மோல்பிரீத் சிங், உள்ளூர் கிரிக்கெட்டில் பல வருட அனுபவம் கொண்டவர். பல ஐபிஎல் நட்சத்திரங்கள் நிறைந்த பஞ்சாப் அணிக்காக இவர் தொடர்ந்து ஆடுகிறார்.அபிஷேக் ஷர்மா, ப்ரப்சிம்ரன் சிங் போன்ற பஞ்சாப் அணி வீரர்கள் பெற்ற பணத்தையும், கவனத்தையும் அன்மோல்பிரீத் இதுவரை கண்டதில்லை. ஆனால், 2026 ஐபிஎல் ஏலத்தில் இவருக்கு வாய்ப்பு மாறலாம்.சையத் முஷ்டாக் அலி கோப்பையில், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக்கிற்கு அடுத்தபடியாக பஞ்சாப்பிற்காக அதிக ரன்கள் குவித்தவர் இவரே. ஏழு போட்டிகளில் 172 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 241 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணி எலைட் குரூப் சி-யில் முதலிடம் பெற உதவினார்.
அசோக் ஷர்மா (ராஜஸ்தான்): ராஜஸ்தானின் 23 வயதான வேகப்பந்து வீச்சாளர் அசோக் ஷர்மா, சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் சுற்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் ஆவார். ஏழு ஆட்டங்களில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் 2026 ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவரை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைத் தேடும் அணிகள் அதிகம் விரும்புவார்கள்.அத்துடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) போன்ற ஐபிஎல் அணிகளில் முன்பு இடம்பிடித்த அனுபவமும் இவருக்குச் சாதகமாக அமையலாம். வரும் மினி ஏலத்தில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், சிஎஸ்கே அணியிடம் ரூ.43.40 கோடியும் எஞ்சி இருக்கிறது.