மும்பை: 2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், முன்னணி அணிகளுக்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக இந்தத் தொடரின் தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். சிலர் தொடரை விட்டே முழுமையாக வெளியேறியுள்ளனர். இது சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 4 அணிகளின் திட்டங்களை முற்றிலுமாகச் சிதைத்துள்ளது. அதிலும் ஆஸ்திரேலிய அணியின் மும்மூர்த்தி பந்துவீச்சாளர்கள் என கூறப்படும் கம்மின்ஸ். ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகியோரும் விலகி உள்ளனர்.
சென்னை அணியின் முக்கிய டெத் ஓவர் பந்துவீச்சாளரான நாதன் எல்லிஸ் தசைப்பிடிப்பு காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாகச் சீன் அபோட் போன்ற மாற்று வீரரைத் தேடும் பணியில் சென்னை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதேபோல், 3 கோடி ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் கால் காயம் காரணமாகத் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். மேலும், மூத்த வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஏலத்திற்கு முன்பாகவே தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் மூவர் தொடக்கப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்பது அந்தந்த அணிகளுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. முதுகுவலி காரணமாக ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதல் 2 முதல் 4 போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அணியின் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாகக் குறைந்தது 2 போட்டிகளைத் தவறவிடுவார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மிட்செல் ஸ்டார்க் பணிச்சுமை காரணமாக முதல் சில வாரங்களில் பங்கேற்க மாட்டார்.
இந்த விலகல்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் இல்லாததால் அந்த அணியின் பந்துவீச்சு மற்றும் தலைமைப் பண்பு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. முதல் சில போட்டிகளுக்கு இஷான் கிஷன் அல்லது அபிஷேக் சர்மா கேப்டனாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு அணியைப் பொறுத்தவரை, தொடக்கப் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் ஜோஷ் ஹேசில்வுட் இல்லாதது பெரும் குறையாகும். இது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிட்செல் ஸ்டார்க் இல்லாததால், பவர்பிளே ஓவர்களில் புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தும் அவர்களது திட்டம் பெரிய அளவில் பாதிக்கப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெத் ஓவர்களுக்காக நாதன் எல்லிஸை பெரிதும் நம்பியிருந்த நிலையில், தற்போது புதிய யுக்திகளை வகுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

முன்னணி வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கும் இந்த 4 அணிகளும் தொடக்கத்திலேயே சறுக்கல்களைச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கும் இந்த முடிவுகள், ஐபிஎல் அணிகளுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த நெருக்கடியை எந்த அணி தனது மாற்று வீரர்களை வைத்துச் சரியாகக் கையாள்கிறதோ, அந்த அணியே புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும். 2026 ஐபிஎல் தொடரின் முதல் 10 நாட்கள் ஒட்டுமொத்த சீசனின் போக்கையும் தீர்மானிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
