டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியினர் கோவில்களுக்கு செல்லும் வழக்கம் குறித்தும், ஐபிஎல் தொடரில் உள்ள இம்பேக்ட் பிளேயர் விதிமுறை குறித்தும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் வெளிப்படையாக பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்சர் படேல், வெளிநாட்டு தொடர்கள் மற்றும் ஐசிசி தொடர்களின் போது இந்திய வீரர்கள் கோவில்களுக்குச் செல்வது குறித்து விளக்கமளித்தார்.
"கோவில்களுக்கு செல்வது ஒன்றும் தவறான விஷயம் இல்லை. பொதுவாக எங்களால் எளிதாக செல்ல முடியாத பல கோவில்களுக்கு, கிரிக்கெட் தொடர்களின் போது எங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பின் மூலம் எங்களால் செல்ல முடிகிறது" என்று அவர் கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய வீரர்கள் பல கோவில்களுக்கு சென்றனர். கோப்பையை வென்ற பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கோப்பையுடன் அனுமன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்து சிலர் விமர்சனமும் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை குறித்து தனது கடுமையான அதிருப்தியை அக்சர் படேல் வெளிப்படுத்தினார். "உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ஒரு ஆல்ரவுண்டரான எனக்கு இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை சுத்தமாக பிடிக்கவில்லை. முன்பு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் சேர்த்து ஒரு ஆல்ரவுண்டரைத் தேர்ந்தெடுப்பார்கள்."
"ஆனால் இந்த விதிமுறை வந்த பிறகு, அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் அல்லது பவுலரை மட்டுமே ஆடுகளத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்கிறது. ஆல்ரவுண்டர்களின் தேவையை இது முற்றிலுமாக குறைத்து விடுகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு இது பிடிக்கவில்லை என்றாலும், இது விதிமுறை என்பதால் நாங்கள் அதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்" என்று கூறினார் அக்சர் பட்டேல்.
போட்டியின் எந்த கட்டத்திலும் 5 மாற்று வீரர்களில் ஒருவரை களமிறக்க அனுமதிக்கும் இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2027 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியை இந்த விதிமுறை கடுமையாக பாதிக்கிறது என்று 2024 ஆம் ஆண்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார்.

அதேபோல ஹர்திக் பாண்டியாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டிலேயே டெல்லி அணியின் துணை கேப்டனாக இருந்தபோது, இந்த விதிமுறையால் தனது பேட்டிங் வரிசை பாதிக்கப்படுவதாக அக்சர் படேல் சுட்டிக்காட்டியிருந்தார். அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, ஐபிஎல் 2026 சீசனின் தனது முதல் லீக் போட்டியில் ஏப்ரல் 1 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஏகானா மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.
