கொல்கத்தா: 2026-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்த விவகாரம், தற்போது விளையாட்டுத் தளத்தை விட்டு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. "ஷாரூக்கானை கொல்கத்தா நகருக்குள்ளேயே நுழைய விடமாட்டோம்" என பாஜக தலைவர் ஒருவர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை, ஷாரூக்கானின் கேகேஆர் அணி ரூ. 9.20 கோடி என்ற பெரும் தொகைக்கு வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வங்கதேச வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இருப்பினும், வங்கதேசத்தில் அண்மைக்காலமாக இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, வங்கதேச வீரர்களை ஐபிஎல்லில் அனுமதிக்கக் கூடாது என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்தச் சூழலில், மேற்கு வங்காள பாஜக தலைவர் கௌஸ்தவ் பச்சி (Kaustav Bagchi) கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், "வங்கதேச கிரிக்கெட் வீரர் எவரேனும் கொல்கத்தா அணியில் இடம்பெற்று, இங்கு வந்து விளையாட நினைத்தால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதுமட்டுமல்ல, அணியின் உரிமையாளரான ஷாரூக்கானையும் கொல்கத்தாவுக்குள் நுழைய விடமாட்டோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
தனது எதிர்ப்பிற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். "முஸ்தஃபிசுர் ரஹ்மான் போன்ற வங்கதேச வீரர்கள் இங்கு வந்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்கள். ஆனால், மறுபுறம் அங்கிருந்து கடத்தப்படும் ஆயுதங்களால் நமது இந்து சகோதரர்கள் கொல்லப்படுகிறார்கள். இவை இரண்டும் ஒரே நேரத்தில் நடப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது" என்று பச்சி குற்றம் சாட்டினார்.
நாடு முழுவதும் இதுதொடர்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. "வங்கதேச வீரர்களை ஐபிஎல்லில் விளையாடத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ உத்தரவும் இதுவரை வரவில்லை. இது எங்கள் கையில் இல்லை" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில இந்து அமைப்புகள் மற்றும் பாஜக தலைவர்கள் ஷாரூக்கானை 'துரோகி' என்று விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஷாரூக்கானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். விளையாட்டு, அரசியல் மற்றும் மதம் சார்ந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளதால், ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்பே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது.