சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபில்டிங் பயிற்சியாளராக ரெய்னா, நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஃபாஸ்டர் நியமிக்கஙபபட்டுள்ளார். இதன் மூலம், IPL 2026 சீசனுக்காக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கீழ்ஃபாஸ்டர் இணைந்துள்ளார். கடந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருந்த அணி, இந்த முறை மீண்டு எழத் துடிக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ஃபாஸ்டர், சிஎஸ்கேவின் புதிய ஃபில்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
45 வயதான ஃபாஸ்டர், 2001 முதல் 2009 வரை இங்கிலாந்துக்காக ஏழு டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் அவர் தனது புதிய பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் இது குறித்மு பேசும் போது, "நாங்கள் ஒரு நல்ல ஃபில்டிங் பயிற்சியாளரைத் தேடி வந்தோம். அவர் எங்களுடன் இணைவார் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

ஜேம்ஸ் ஃபாஸ்டருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஃபில்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளது. மேலும், டெசட் வைப்பர்ஸ், நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ், பெஷாவர் சல்மி போன்ற உலகின் பல்வேறு ஃபிரான்சைஸ் அணிகளுடனும் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.

தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கைத் தவிர, சிஎஸ்கேவின் தற்போதைய துணைப் பயிற்சி ஊழியர்கள் அணியில் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி , பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ், (உதவிப் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் ஃபில்டிங் பயிற்சியாளரான ராஜீவ் குமார் ஆகியோர் அடங்குவர். ரஸ்ஸல் ராதாகிருஷ்ணன் அணி மேலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். முன்னாள் சிஎஸ்கே வீரர் ரெய்னாவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அது நடக்கவில்லை.
சிஎஸ்கே அணி தனது இந்திய வீரர்களுக்காக சீசனுக்கு முந்தைய பயிற்சி முகாமைத் தொடங்கியுள்ளது. தோனி, ஆயிஷ் மத்ரே உள்ளிட்ட உள்நாட்டு அணி வீரர்கள் பெரும்பாலானோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். வரவிருக்கும் சீசனுக்கான பயிற்சிகளை அணி, தனது சிறப்பு மையத்தில் மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே மற்றும் ரஞ்சி டிராபி பணிகளை முடித்த ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் பின்னர் முகாமில் இணைவார்கள்.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே, கடந்த சீசனில் மோசமாகத் தடுமாறியது. 14 போட்டிகளில் வெறும் நான்கு வெற்றிகளுடன், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இந்த நிலையில், வலுவான கம்பேக்கை உறுதிசெய்யும் நோக்கில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஒப்பந்தத்தைச் சிஎஸ்கே மேற்கொண்டுள்ளது.

அதன் படி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 97* ரன்கள் குவித்து, இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்ற அவரது அபார ஆட்டத்திற்குப் பிறகு, சஞ்சு சாம்சன் தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.