சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வலைப்பயிற்சியில், மகேந்திர சிங் தோனியும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஒன்றாகப் பயிற்சியில் ஈடுபட்டு பந்துகளை விளாசினர்.
ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே, ஐபிஎல் 2026 சீசனுக்கான புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. அணி வெளியிட்ட விளம்பர வீடியோ, ரசிகர்களுக்கு இரட்டை இன்ப அதிர்ச்சியை அளித்தது. புதிய சீசனுக்கான சிஎஸ்கே முகாமில் தோனி இணைந்ததையும், அணியின் ஐபிஎல் 2026 ஜெர்சியின் அறிமுகமும் அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டது.

முன்பு கை ஸ்லீவ்களில் இருந்த காமோஃப்ளாஜ் வடிவம், தற்போது ஜெர்சியின் முன்புறம் அமாறியுள்ளது. இது தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. சிஎஸ்கே லோகோ மேலே அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்கள், அணி வென்ற ஐந்து ஐபிஎல் பட்டங்களை குறிக்கின்றன.
முந்தைய ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே மோசமாகச் செயல்பட்டது. 14 போட்டிகளில் 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2026 சீசனுக்காக அணியில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகியோருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் டிரேட் செய்யப்பட்டது முக்கியமானது.
பிரஷாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா போன்ற இளம் வீரர்களையும் சிஎஸ்கே களமிறக்கியுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து அணிக்குத் தலைமை தாங்குவார். ஆறாவது ஐபிஎல் பட்டமே இவர்களது இலக்கு. சிஎஸ்கே அகாடமி பயிற்சி மையத்தில் சுமார் 15 இந்திய வீரர்கள் இந்த ஆயத்தப் பயிற்சி முகாமில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் தூபே போன்ற சர்வதேச வீரர்கள், தொடர் முடிந்ததும் முகாமில் இணைவார்கள். சமீபத்தில் முடிந்த ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் கோபாலும் பின்னர் இணையவுள்ளார்.