கொல்கத்தா: அண்டை நாடான வங்கதேசத்தில் நிலவும் அரசியல் பதற்றம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை, ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய அளவில் தப்பி இருக்கிறது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் தீபு சந்திர தாஸ் என்ற நபர் மோசமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், வங்கதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு வழங்குவது ஏற்புடையதல்ல என்று பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் மினி ஏலத்தில், வங்கதேசத்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை சுமார் ரூ. 9.2 கோடி என்ற பெரும் தொகைக்கு ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
தற்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதால், முஸ்தஃபிசுரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சங்கீத் சோம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் #BoycottKKR மற்றும் #BoycottIPL போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. முஸ்தஃபிசுர் விளையாடினால் மைதானங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொல்கத்தா அணி நிர்வாகம் தர்மசங்கடமான நிலையில் உள்ளது.
இந்த விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அதிர்ஷ்டவசமாகச் சிக்கலிலிருந்து தப்பியுள்ளது. கடந்த 2024 சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர் முஸ்தஃபிசுர். இந்த முறையும் ஏலத்தில் அவரை மீண்டும் எடுக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆர்வம் காட்டியது.
2026 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியுடன் போட்டி போட்டு விலையை ஏற்றிய சென்னை அணி, ஒரு கட்டத்தில் விலை மிக அதிகமாகச் சென்றதால் போட்டியிலிருந்து விலகியது. இறுதியில் 9 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து கொல்கத்தா அவரை வாங்கியது. அன்று ஏலத்தில் அவரைத் தவறவிட்டது, இன்று சிஎஸ்கே அணிக்குப் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளது. மறுபுறம், பெரும் தொகையைச் செலவழித்த கொல்கத்தா அணி, தற்போது அரசியல் மற்றும் சமூக எதிர்ப்புகளுக்கு நடுவே சிக்கித் தவிக்கிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், "நாங்கள் மத்திய அரசுடன் தொடர்பில் இருக்கிறோம். வங்கதேசம் ஒரு எதிரி நாடாக அறிவிக்கப்படாத நிலையில், உணர்ச்சிகரமான தூண்டுதல்களின் அடிப்படையில் மட்டும் ஒரு வீரரைத் தடை செய்ய முடியாது. இருப்பினும் சூழலைக் கூர்ந்து கவனித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.