சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகியது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மினி ஏலத்திற்கு முன் மதீஷா பதிரனாவை அணி தக்கவைக்காததால், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் இல்லாமல் சிஎஸ்கே தடுமாறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இந்த அதிர்ச்சியான செய்தியை, தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தினார். டெத் ஓவர்களில் எல்லிஸ் அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளர் என்பதை ஒப்புக்கொண்ட விஸ்வநாதன், மாற்று வீரரை தேடுவதாக கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட வீடியோவில்,"எல்லிஸ் விலகிவிட்டால், டெத் ஓவர்களில் யார் பந்துவீசுவார்கள்? ஏலத்திற்கு முன் சிஎஸ்கே மதீஷா பதிரனாவை விடுவித்தது. ஆம், அவர் ஒரு டெத் பந்து வீச்சாளர். ஆனால் அவரது உடல்நிலை குறித்த கவலைகள் இருந்தன, அதுவும் சரியானதே. KKR அணிக்காக அவர் எத்தனை போட்டிகளுக்கு களமிறங்குவார் எனத் தெரியவில்லை. அவரது ஃபார்மும் சற்று குறைந்திருந்தது, அதனால் அவரை விடுவித்தது சரியான முடிவாக இருந்திருக்கலாம்," என்று சோப்ரா கூறினார்.

"பதிரனாவை விடுவித்த பிறகு, எல்லிஸ் டெத் பந்துவீச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் விலகினால், டெத் ஓவர்களை யார் வீசுவார்கள்? சிஎஸ்கே அணியில் மாட் ஹென்றி, ஜேமி ஓவர்டன், முகேஷ் சௌத்ரி, கலீல் அஹமது, அன்ஷுல் காம்போஜ், குர்ஜப்நீத் சிங் போன்றவர்கள் உள்ளனர். இவர்களில் யாரும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் இல்லை. டெத் பந்துவீச்சு பெரும் கவலையாகிவிட்டது, எல்லிஸ் இல்லாதது தீவிர பின்னடைவாகும்," என்று கவலை தெரிவித்தார்.
ஐபிஎல் 2025 சீசனில் எல்லிஸ் சிஎஸ்கே அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். சேப்பாக்கத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1 விக்கெட்டை வீழ்த்தி 38 ரன்களைக் கொடுத்தார். தனது ஐபிஎல் போட்டிகளில், 31 வயதான அவர் 17 ஆட்டங்களில் பங்கேற்று, 28.73 சராசரியிலும் 8.66 எகானமி ரேட்டிலும் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4-30 என்பது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.
பதிரனாவை விடுவித்த பிறகு, சிஎஸ்கே அணி ஐபிஎல் 2026 ஏலத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றியை ₹2 கோடி அடிப்படை விலைக்கு வாங்கியது. மேலும், இளம் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாக் ஃபால்க்ஸ்-ஐ ₹75 லட்சத்திற்கு வாங்கியது. மினி ஏலத்திற்கு முன்னதாக, சென்னை அணி காம்போஜ், குர்ஜப்நீத், ஓவர்டன், சௌத்ரி மற்றும் கலீல் ஆகியோரை தக்கவைத்திருந்தது.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, ஐபிஎல் 2026 தொடரின் தங்கள் முதல் போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிராக மார்ச் 30 அன்று குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.