சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் ஐந்து முறை சாம்பியன் ஆன சிஎஸ்கே அணியில் நட்சத்திர வீரர் தோனி காயம் காரணமாக முதல் இரண்டு வாரத்திற்கு எந்த வித போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் எந்த மாதிரி பிளெயிங் லெவனை இனி சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். தோனி இல்லை என்றாலும் சிஎஸ்கே அணியில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல திறமை வாய்ந்த அதிரடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களை வைத்து அணியை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பது குறித்து அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சனை களமிறக்க வேண்டும் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று மூன்றாவது வீரராக டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த உர்வில் பட்லேலை மூன்றாவது வீரராக சேர்க்க வேண்டும் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

நடுவரிசையில் நான்காவது இடத்தில் தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டிவால்ட் பிரவிசையும், ஐந்தாவது வீரராக சிவம் துபேவையும் சேர்க்க வேண்டும் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். ஆறாவது வீரராக சர்பராஸ் கான் அல்லது ஆயுஷ் மாத்ரே என இரண்டு பேரில் ஏதேனும் ஒருவருக்கு வாய்ப்பு அளியுங்கள் என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
ஏழாவது வீரராக இளம் அதிரடி வீரர் கார்த்திக் சர்மாவை சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அஸ்வின், எட்டாவது வீரராக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் மற்றும் சுழற் பந்துவீச்சாளரான அகில் உசேனை சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஒன்பதாவது வீரராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமதையும், பத்தாவது வீரராக வேக பந்துவீச்சாளர் மேட் ஹென்றியையும் சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
11 வது வீரராக கலீல் அகமது சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அஸ்வின், இம்பாக்ட் வீரர்களாக அன்சூல் காம்போஜ், ராம்கோஷ், ராகுல் சாகர் அல்லது ஸ்ரேயாஸ் கோபால் ஆகிய நான்கு வீரர்கள் ஏதேனும் ஒருவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அடுத்த இரண்டு வாரத்திற்குள் சிஎஸ்கே அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற போல் மாற்றம் செய்தாலே போதும் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று பிரசாந்த் வீர் என்ற ஆல்ரவுண்ட் சுழற் பந்துவீச்சாளரையும் பிளேயிங் லெவனில் சேர்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ள அஸ்வின், அணியில் தற்போது பேட்டிங்கில் அனுபவம் இல்லை என்பதால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்த்துக் கொள்வதே சரியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.