IPL 2026: கருப்பு பட்டை அணிந்து ஆடிய சிஎஸ்கே - கொல்கத்தா வீரர்கள்.. தமிழக கிரிக்கெட் ஜாம்பவான் மறைவு
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதிய போட்டி தொடங்கிய போது இரு அணி வீரர்களும் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இது ஏன் என்பது குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சி.டி. கோபிநாத் சமீபத்தில் காலமானார். அவர் அப்போதைய மெட்ராஸ் அணியில் இடம் பெற்று ஆடியவர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே சென்னை மற்றும் கொல்கத்தா அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து களம் இறங்கினர். 1951 முதல் 1960 வரை இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோபிநாத், 1952-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் முக்கிய பங்கு வகித்தவர்.

மெட்ராஸ் மாநில அணிக்காக 60 முதல்தர போட்டிகளில் விளையாடி 4259 ரன்கள் குவித்த அவர், 1954-55 சீசனில் மெட்ராஸ் அணி முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றபோது கேப்டனாக வழிநடத்தினார். அவரது மறைவுக்கு பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தொடரும் ருதுராஜின் சொதப்பல்
மறுபுறம், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் ஃபார்ம் இந்த சீசனில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவர் 6 பந்துகளைச் சந்தித்து வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அவர் விளையாடிய 5 போட்டிகளில் முறையே 6, 28, 7, 15, 7 என மொத்தம் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 12.6 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 105.0 ஆகவும் சரிந்துள்ளது.
சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே.அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 48 ரன்களும், பிரெவிஸ் 29 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தனர்.


Click it and Unblock the Notifications