IPL 2026: சிஎஸ்கே, லக்னோ அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடிய காரணம் என்ன?
லக்னோ: ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில், உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட கடும் சூறாவளி பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இரு அணி வீரர்களும் கறுப்புப் பட்டைகளை அணிந்து விளையாடினர். லக்னோவின் ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டி சென்னை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
வட மாநிலங்களில் வீசிய புழுதிப் புயல்கள், பலத்த மழை மற்றும் மின்னல் தாக்குதலால் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதிகாரிகள் வியாழக்கிழமை அன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தக் கோர சம்பவத்தில் குறைந்தது 96 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்கள் புதன்கிழமை இரவு இந்த புயலின் கடுமையான சீற்றத்திற்கு ஆளாயின.

புயல் பாதிப்பில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, போட்டி தொடங்குவதற்கு முன் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. “இன்று போட்டி தொடங்குவதற்கு முன் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உத்தரப்பிரதேச புயல் பாதிப்பில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, லக்னோ மற்றும் சென்னை அணிகளின் ஆடும் லெவன் வீரர்களும், போட்டி நடுவர்களும் கறுப்புப் பட்டைகளை அணிந்துள்ளனர்,” என்று ஐபிஎல் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது.
வேரோடு சாய்ந்த மரங்கள், இடிந்து விழுந்த கட்டடங்கள் மற்றும் மின்னல் தாக்குதல்களே பெரும்பாலான உயிரிழப்புகளுக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் மற்றும் ரயில் தடங்களில் விழுந்த மரங்களை அகற்ற காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் செயின்சாக்கள் மற்றும் கிரேன்களைப் பயன்படுத்தினர். இது போன்ற புயல்கள் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் வட இந்தியாவில் சாதாரணமாக நிகழும்.
இது குறித்து பேசிய நிர்வாக அதிகாரி நரேந்திர என். ஸ்ரீவஸ்தவா பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கிராமப்புற மாவட்டங்களில் வீடுகள், விவசாயப் பயிர்கள் மற்றும் மின் கட்டமைப்புகள் சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்த ஒருவர், “புயல் திடீரென வந்தது. சில நிமிடங்களிலேயே வானம் முழுவதுமாக இருண்டுவிட்டது. தகரக் கூரைகள் பறந்தன, மக்கள் வீட்டிற்குள் ஓடி ஒளிந்தனர். மாலை முழுவதும் மரங்கள் விழுந்து சத்தம் கேட்டது,” என்று பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications