கவுஹாத்தி: 2026 ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், "இளம் வீரர்களை இறக்கியும் இவங்க இன்னும் மாறலையா?" என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டனர். டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
"சிஎஸ்கே-வுக்கு புது விக்கெட் கீப்பராக சாம்சன் வந்துட்டாரு, தோனி இல்லாமல் ருதுராஜ் கேப்டன்சியில் மாஸ் காட்டப் போறாரு" என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே இடி விழுந்தது. 1.6 ஓவர்களில் சஞ்சு சாம்சன் 6 ரன்களில் அவுட் ஆகி 'வெல்கம் டு சிஎஸ்கே' என்று சொன்னார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் ருதுராஜ் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதில் கொடுமை என்னவென்றால், இந்திய அண்டர் 19 கேப்டன் ஆயுஷ் மத்ரே தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி பெவிலியன் போனார். 3.1 ஓவரில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தத்தளித்தது.

நடுவில் வந்த மேத்யூ ஷார்ட் 2 ரன்களில் நடையைக் கட்ட, சர்பராஸ் கான் (17) மற்றும் சிவம் துபே (6) ஓரளவுக்கு அதிரடி காட்டுவார்கள் என்று பார்த்தால், அங்கே வந்தார் முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா. சிஎஸ்கே-வில் இருந்து ராஜஸ்தான் போன ஜடேஜா, பழைய பாசத்தைப் பார்க்காமல் ஒரே ஓவரில் சர்பராஸ் மற்றும் துபே ஆகிய இருவரையும் தூக்கினார். 57 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையைப் பார்த்த ரசிகர்கள், "யப்பா.. ஒரு 100 ரன்னாவது அடிங்கப்பா" என்று வேண்டத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் 100 ரன்களைத் தாண்டுவதே கஷ்டம் என்ற நிலையில், ஜேமி ஓவர்டன் தனி ஆளாகப் போராடினார். அவர் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்ததால்தான் சிஎஸ்கே அணி ஓரளவுக்கு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டது. மற்ற வீரர்கள் கார்த்திக் சர்மா (18), மேட் ஹென்றி (5), அன்ஷுல் காம்போஜ் (7) எனச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 19.4 ஓவரில் 127 ரன்களுக்குச் சிஎஸ்கே அணி ஆல்-அவுட் ஆனது.

ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நந்ரே பர்கர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினர். ஜடேஜாவும் தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார். 128 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. சிஎஸ்கே பேட்ஸ்மேன்களின் இந்த மந்தமான ஆட்டம் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தினாலும், "நாங்கெல்லாம் தோத்து மீண்டு வர்ற பரம்பரைடா" என்று ரசிகர்கள் தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டு வருகின்றனர்.