IPL 2026: ருதுராஜ் பேட்டிங்கில் சொதப்புகிறார்.. தயவு செய்து 19 வயது வீரருக்கு வாய்ப்பு தாங்க.. ஆகாஷ்
சென்னை: ஐபிஎல் 2026 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மெதுவான ஆட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான மோதலில், கெய்க்வாட் மெதுவாக ஆடியது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் 2026 சீசனின் 18வது லீக் ஆட்டத்தில், கெய்க்வாட் 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்த போட்டியில் சென்னை அணி டெல்லிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. பின்னர், டெல்லி அணியை 189 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஆகாஷ் சோப்ரா, ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற கணக்கிலேயே ஆட்டமிழந்து வருவதாகக் குறிப்பிட்டார். இதனால், ஆயுஷ் மாத்ரேவுடன் தனது பேட்டிங் நிலையை ருதுராஜ் மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
"ருதுராஜ் கெய்க்வாட், நீங்கள் யோசிக்க வேண்டும். நீங்கள் ஒரு பந்துக்கு ஒரு ரன்னை விட மெதுவாக விளையாடுகிறீர்கள், இதை ஏன் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் மூன்று ஓவர்கள் விளையாடி 15 ரன்கள் அடித்தீர்கள். இது சரியல்ல. ஒரு தொடக்க ஆட்டக்காரராக அவரது புள்ளிவிவரங்கள் மிகவும் மோசமாக உள்ளன. அவர் ரன்-எ-பால் கணக்கில் மட்டுமே விளையாடுகிறார்."
"ருதுராஜை தவிர எல்லோரும் அதிரடியாக அடித்து ஆடுகிறார்கள். அவர் சரிசெய்ய வேண்டிய ஒரு பெரிய கேள்வி இது. அவர் மெதுவாக ஆடுகிறார் என்பதும், ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடுகிறார் என்பதும் ஒரு பிரச்னை என்று நான் நினைக்கிறேன். ஆயுஷ் மாத்ரேவை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கச் சொல்லி, நீங்கள் மிடில் ஆர்டரில் ஆட வாருங்கள். அவர் ரிட்டயர்ட் அவுட் ஆவதற்கு முன் மிகச் சிறப்பாக ரன்கள் அடித்தார்," எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் 2026 சீசனில், ருதுராஜ் கெய்க்வாட் நான்கு இன்னிங்ஸ்களில் 103.70 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 56 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். மறுபுறம், ஆயுஷ் மாத்ரே டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்து, தனது நான்கு இன்னிங்ஸ்களில் 160.24 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 133 ரன்களை குவித்துள்ளார்.
கெய்க்வாட் மீது விமர்சனம் வைத்த அதே வீடியோவில், ஆகாஷ் சோப்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் சிறப்பான சதத்தைப் பாராட்டிப் பேசினார். டெல்லிக்கு எதிரான போட்டியில் CSK-வின் வெற்றிக்கு சாம்சனின் பேட்டிங் பெரிதும் உதவியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சஞ்சு சாம்சனின் சதம் CSK 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க பெரிதும் உதவியது. மேலும், ஒரு ஐபிஎல் சீசனின் முதல் சதத்தை நான்காவது முறையாகசதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்ததற்காகவும் ஆகாஷ் சோப்ரா சாம்சனை பாராட்டினார்.
"சஞ்சுவின் சதம் பற்றிப் பேச வேண்டியது அவசியம், ஏனெனில் இது CSK அணிக்காக அவர் அடித்த முதல் சதம். அவர் சதம் அடிக்கும் போதெல்லாம், அது அந்த சீசனின் முதல் சதமாகவே உள்ளது. இது நான்காவது முறையாக நடக்கிறது. அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். முதல் மூன்று போட்டிகளில் அவர் திணறினார், ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தார்," என்று சோப்ரா பேசினார்.
சஞ்சு சாம்சன் தனது அரை சதம் மற்றும் சதம் ஆகியவற்றை நெருங்கும் போது சற்று நிதானமாக ஆடினார் என்பதை ஏற்றுக்கொண்ட ஆகாஷ் சோப்ரா, இருப்பினும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அவர் இறுதிவரை களத்தில் நின்று அதனை ஈடுசெய்தார் என்று குறிப்பிட்டார்.
"ஆனால், இம்முறை அவர் பந்தை கடினமாக அடிக்காமல், சரியான டைமிங்குடன் விளையாடினார். அவரது சிந்தனையில் தெளிவு வெளிப்பட்டது, மேலும் அவர் தொடர்ந்து அடித்து நொறுக்கினார். அவர் இரண்டு சந்தர்ப்பங்களில் சற்று நிதானமடைந்தது உண்மைதான், ஆனால் அது ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை, ஏனென்றால் கடைசி வரை களத்தில் நிற்பேன் என அவர் கூறினார்," என்று ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டார். சிஎஸ்கே அணி அடுத்ததாக வரும் செவ்வாய்கிழமை ஏப்ரல் 14ஆம் தேதி கொல்கத்தா அணியுடன் மீண்டும் சேப்பாக்கத்தில் மோதுகிறது.


Click it and Unblock the Notifications