மும்பை: ஐபிஎல் 2026 தொடரின் முதல் சில போட்டிகளில் டெவால்ட் பிரெவிஸ் இல்லாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிக்கல்கள் மேலும் அதிகரித்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் சஞ்சு சாம்சனுடன் இணைந்து தொடக்க வீரராகக் களமிறங்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸை, சிஎஸ்கே தனது ஐபிஎல் 2026 தொடக்கப் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, பிரெவிஸுக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவர் விளையாட முடியாது என சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிப்படுத்தினார்.

தனது யூடியூப் வீடியோவில், டெவால்ட் பிரெவிஸ் மற்றும் எம்.எஸ். தோனி இல்லாத நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவது தவறான முடிவு என்றார் சோப்ரா. ஸ்பென்சர் ஜான்சன், நாதன் எல்லிஸ் போன்றோரும் இல்லாதது சிஎஸ்கேயின் சிக்கல்களை மேலும் அதிகரித்தாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து சோப்ரா, "டெவால்ட் பிரெவிஸ் இப்போது இல்லை. முதல் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் பிரெவிஸை நீங்கள் இழந்துவிட்டீர்கள். ஸ்பென்சர் ஜான்சனும் இல்லை. காயமடைந்த வீரருக்குப் பதிலாக மற்றொரு காயமடைந்த வீரரை எடுத்தீர்கள். நாதன் எல்லிஸ் ஏற்கனவே விலகிவிட்டார். எம்.எஸ். தோனி இரண்டு வாரங்களுக்கு இல்லை. ஒரு பந்து கூட வீசப்படுவதற்கு முன்பே உங்கள் சிக்கல்கள் பெருகிவிட்டன," என்று குறிப்பிட்டார்.
"பிரெவிஸ் இல்லாததால், உங்கள் XI தானாகவே மாறிவிடும், ஆனால் உங்கள் ஆர்டரும் மாற வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட் இப்போது சஞ்சு சாம்சனுடன் தொடக்க வீரராக வரக்கூடாது. ஆயுஷ் மாத்ரேவை சஞ்சு சாம்சனுடன் தொடக்க வீரராக அனுப்பி, ருதுராஜை 3வது இடத்தில் களமிறக்குங்கள். ருதுராஜ் மற்றும் சஞ்சுவுடன் நீங்கள் இன்னமும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினால் அது தவறாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
கெய்க்வாட் சாம்சனுடன் தொடக்க வீரராக வரும் பட்சத்தில், ஷிவம் துபே மட்டுமே நடு வரிசையில் அனுபவமிக்க வீரராக இருப்பார் என சோப்ரா சுட்டிக்காட்டினார். இது இளம் வீரர்கள் மாத்ரே, உர்வில் படேல் அல்லது சர்பராஸ் கான் போன்றோரை அதிகம் நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் என்றார்.
"தொடங்குபவர்களுக்குப் பிறகு, மாத்ரே, உர்வில் படேல் அல்லது சர்பராஸ் கான் ஆகயோரே இருப்பார்கள். ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையிலும் துபே மட்டுமே ஒரே மூத்த வீரராக இருப்பார். இது நிகழ நீங்கள் விரும்பமாட்டீர்கள். அதனால், எதையாவது மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கேப்டன், 3-வது இடத்தில் வாருங்கள்," என்று அவர் அறிவுறுத்தினார்.
சில நாட்களுக்கு முன்பு, ஐபிஎல் 2026-ல் சஞ்சு சாம்சனுடன் தான் தொடக்க வீரர் என ருதுராஜ் கெய்க்வாட் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், பிரெவிஸ் மற்றும் தோனி இல்லாததால் சிஎஸ்கே அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்பராஸ் கானை 4-வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்றும் ஆகாஷ் சோப்ரா பரிந்துரைத்தார்.
"சர்பராஸ் கானை 4-வது இடத்தில் களமிறக்குவது குறித்து கட்டாயம் சிந்தியுங்கள். அது சர்பராஸ்/உர்வில் படேலாக இருக்கலாம். ஷிவம் துபேவை 5-வது இடத்திலும், கார்த்திக் ஷர்மாவை 6-வது இடத்திலும், பிரசாந்த் வீராவை 7-வது இடத்திலும், ஜேமி ஓவர்டனை 8-வது இடத்திலும் களமிறக்குங்கள். அடுத்து நூர் அகமது, கலீல் அகமது, மேட் ஹென்ரி ஆகியோர் வருவார்கள். இதுதான் உங்கள் XI ஆக இருக்க வேண்டும்," என்று அவர் விளக்கினார்.

ஐபிஎல் 2025-ல் சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை இழந்ததுடன், ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகக் குறைந்த ரன் ரேட்டையும் கொண்டிருந்தது. 2020 முதல் 13 போட்டிகளில் 180+ இலக்கை ஒருமுறை மட்டுமே துரத்திய சிஎஸ்கேயின் இளம் வீரர்கள் இந்தச் சிக்கலைச் சரிசெய்ய வேண்டும் என சோப்ரா நம்பிக்கை தெரிவித்தார்.