சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அதிரடி திட்டத்தை போட்டு இருக்கிறது. அதன்படி ஏலத்திற்கு முன்பே பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் அதிரடி நாயகன் மேக்ஸ்வெல் பணம் கொடுத்து வாங்க சிஎஸ்கே முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேக்ஸ்வெல் போன்ற ஒரு அதிரடி வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதிரடி வீரராக அறியப்படும் மேக்ஸ்வெல் பந்துவீச்சிலும் அசத்தக்கூடியவர் ஆனால் மேக்ஸ்வெல்க்கு 37 வயது ஆகிறது.

மேலும் அவர் கடந்த இரண்டு சீசன்களாக பெரிய தாக்கத்தை பேட்டிங்கில் ஏற்படுத்தாதது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேக்ஸ்வெல் கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணிக்காக விளையாடி 14 போட்டிகளில் 400 ரன்கள் குவித்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபிக்காக பத்து போட்டிகளில் விளையாடி வெறும் 52 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
அதேபோன்று 2025 ஆம் ஆண்டு சீசனில் ஏழு போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் மொத்தமாகவே 48 ரன்கள் தான் சேர்த்தார். இதேபோன்று பந்துவீச்சில் மேக்ஸ்வெல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆறு விக்கெட்டுகளும், 2025 ஆம் ஆண்டு சீசனில் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மேக்ஸ்வெல் பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒருவேளை அவர் பார்முக்கு வந்தால் அவரை விட ஒரு அதிபயங்கர அதிரடி பேட்ஸ்மேன் உலகில் வேறு யாரும் கிடையாது. சேப்பாக்கம் மைதானத்தில் மேக்ஸ்வெல் பல அதிரடி ஆட்டங்களை ஆடிருக்கிறார். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களை அல்வா போல் சாப்பிட்டு மைதானத்தில் நான்கு பக்கமும் சுழன்று சுழன்றி அடிப்பார்.
தோனியின் அணிக்குள் வந்துவிட்டால் எப்பேர்பட்ட வீரர்களும் ஃபார்முக்கு திரும்பி வந்து விடுவார்கள். அதனை நம்பி மேக்ஸ்வெல்லை வாங்கலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சில ரசிகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடுமாறி வரும் மேக்ஸ்வெல்லை வாங்க வேண்டாம் என்றும்,அதற்கு பதில் வேறு இளம் வீரரை வாங்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.