சென்னை: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பத்திரனாவை விடுவித்த முடிவை தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் விமர்சித்துள்ளார். பத்திரனா மீது அதிக முதலீடு செய்திருந்ததையும், அணியில் டிபென்சிவ் பந்துவீச்சாளர்கள் இல்லாததையும் முகுந்த் சுட்டிக்காட்டினார். இது வரும் சீசனில் அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
ஐபிஎல் 2026 ஏலத்தில், CSK மேட் ஹென்றி, அக்கீல் ஹொசைன், சாக் ஃபோக்ஸ், ராகுல் சஹார் ஆகியோரை வாங்கியது. முன்னதாக, நாதன் எல்லிஸ், கலீல் அகமது, முகேஷ் சௌத்ரி போன்ற வீரர்களை தக்கவைத்தது. எனினும், காயம் காரணமாக நாதன் எல்லிஸ் ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் பத்திரனாவை விடுவித்த CSK-ன் முடிவிற்கு முகுந்த் ஆச்சரியம் தெரிவித்தார். பந்துவீச்சாளர்களை வாங்குவது தொடர்பான அவர்களின் ஏல உத்தியையும் அவர் கேள்விக்குள்ளாக்கினார்.

"ஏலத்தில் அவர்கள் சற்று குழப்பத்தில் இருந்தனர். எந்த வகையான பந்துவீச்சாளர் தேவை என்று நான் உணர்ந்தேன். இந்த மாதிரியான பிளாட் பிட்ச்களில் அவர்கள் விளையாடப் போகிறார்கள் என்றால், அதை அவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்தார்கள் என்று நான் நினைக்கிறேன், அவர்களிடம் டிபென்சிவ் பந்துவீச்சாளர்கள் இல்லை. மேட் ஹென்றி ஒரு புதிய பந்து நிபுணர். டெத் ஓவர்களில் அவர் ரன்களை வாரி வழங்குவார்."
"காயங்களுடன் சமாளிப்பது மிகவும் கடினம் என்பதை நான் அறிவேன், ஆனால் இப்போது நீங்கள் மேட் ஹென்றியையோ அல்லது அக்கீல் ஹொசைனையோ மட்டுமே விளையாடும் சூழ்நிலைக்கு வந்துள்ளீர்கள். இவர்கள் இருவரும் பவர்பிளேயில் விளையாடும் வீரர்கள், அதிலும் கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ் மற்றும் நூர் அகமது போன்றவர்கள் இருக்கிறார்கள். அடிப்படையில், நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பந்துவீச்சாளர்களை மட்டுமே விளையாடுகிறீர்கள.
அதனால்தான், பதிரனாவை விடுவித்தது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் பத்திரனாவில் நிறைய முதலீடு செய்திருந்தார்கள்."பதிரனா, CSK அணிக்காக 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 21.61 சராசரியுடன் 47 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது எகானமி ரேட் 8.68. ஐபிஎல் 2023 கோப்பையை வென்ற அணியில் அவர் முக்கிய வீரராக இருந்தார்.சென்னை அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், பதிரனாவை விடுவித்த CSK-ன் முடிவை கடுமையாக விமர்சிக்கவில்லை.

தொடர்ச்சியாக காயம் அடைவது, எந்தவொரு அணிக்கும் அவரைத் தேர்ந்தெடுப்பதை கடினமாக்குகிறது என்றார்."பதிரனா விஷயத்தில், அவரைச் சுற்றியுள்ள காயம் குறித்த கவலைகள் இப்போதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையாக மாறிவிட்டன. ஒரு முழு சீசன் வீரருக்காக இவ்வளவு பணம் செலவழிக்கும்போது, ஒருவரை நம்பி இருக்கிறீர்கள். மீண்டும், அவர் போட்டிக்கு முன்னதாகவே காயமடைந்துள்ளார்."ஐபிஎல் 2026 தொடரில் பதிரனா தனது புதிய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக விளையாடுவாரா என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.