சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், வேகப்பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டனை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூர் பிட்ச்சில், ஓவர்டன் தனது முதல் இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றிச் சிறப்பாகப் பந்துவீசினார்.
ஆனால், சிறப்பாகப் பந்துவீசிய ஓவர்டனைத் தொடரவிடாத கெய்க்வாட், கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் அவரை மீண்டும் களமிறக்கினார். இதை வாய்ப்பாகப் பயன்படுத்திய RCB வீரர் டிம் டேவிட், ஓவர்டனின் ஓவரில் நான்கு சிக்சர்களை விளாசி 30 ரன்களைக் குவித்தார். அது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஓவர்டனுக்கு கெய்க்வாட் நான்கு ஓவர்களையும் முழுமையாக வழங்காததும் விமர்சிக்கப்பட்டது.

கெய்க்வாடின் உத்தி குறித்து, முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்தின் யூடியூப் சேனலில் பேசிய பாலாஜி, "ஒரு நல்ல கேப்டன் தனது இரண்டாம் நிலை பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படும்போது, அவர்களின் ஓவர்களை முடித்துவிடுவார். இது இறுதியில் 20 ரன்களை சேமிக்கும். ஓவர்டனைப் போல, இரண்டு ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த ஒருவரை, பிறகு மீண்டும் அழைத்து 40 ரன்களைக் கொடுப்பதில் என்ன பயன்?

அவர் நன்றாகப் பந்துவீசிக் கொண்டிருந்தபோதே, அவரது நான்கு ஓவர்களையும் முடித்திருக்க வேண்டும். டெத் ஓவர்களில் ஓவர்டன் நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகளைத் எடுத்து ஆட்டத்தை வென்று தருவாரா?" எனக் கேள்வியெழுப்பினார். பாலாஜியின் கருத்தை வழிமொழிந்த பத்ரிநாத், டெத் ஓவர்களில் ஓவர்டனைப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார். பிரசாந்த் வீரருக்குப் பதிலாக அகியால் ஹொசைனை ப்ளேயிங் லெவனில் சேர்க்கவும் பரிந்துரைத்தார்.
"அகியால் ஹொசைனுக்கு 11 பேர் கொண்ட அணியில் இதுதான் சரியான இடம். ஓவர்டனை டெத் ஓவர்களில் பயன்படுத்தினால், ஆட்டமே அங்குதான் முடிந்துவிடும். டாப் ஆர்டர் பேட்டிங் முதல் பந்துவீச்சு, கேப்டன்சி உட்பட சிஎஸ்கேவுக்கு தற்போது அனைத்துத் துறைகளிலும் சிக்கல்கள் இருப்பது போல் உணர்கிறேன்," என்று விமர்சித்தார். ஓவர்டன் பயன்பாடு தவிர, ஐபிஎல் 2026 ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகத்தின் தவறான முடிவுகளையும் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்தார்.
சர்வதேச அனுபவம் இல்லாத பிரசாந்த் வீரர் மற்றும் கார்த்திக் ஷர்மா ஆகியோரை தலா ₹14.20 கோடிக்கு வாங்கியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது."கார்த்திக் ஷர்மாவையும் பிரசாந்த் வீரரையும் ₹14 கோடிக்குத் தேர்ந்தெடுத்தது வீரர்களின் தவறு அல்ல, அது உரிமையாளர் நிர்வாகத்தின் தவறு. இவர்களை ₹14 கோடிக்குத் தேர்ந்தெடுக்கப் பெரிய பயிற்சியாளரோ அல்லது ஆய்வாளரோ தேவையில்லை.

₹50 லட்சத்திற்கு இவர்களை வாங்கும்போதே உங்கள் உண்மையான தேர்வுத் திறமை வெளிப்படும். ஆகையால் இது நிர்வாகத்தின் தவறுதான், வீரர்களின் தவறு அல்ல," என பத்ரிநாத் தனது கருத்தை வலுவாகப் பதிவு செய்தார்.கார்த்திக் ஷர்மா மூன்று போட்டிகளில் 8.33 சராசரி, 119.04 ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங்கில் திணறினார். பிரசாந்த் வீரர் இரண்டு போட்டிகளில் பந்துவீசவில்லை; RCBக்கு எதிராக 43 ரன்கள் எடுத்தார். முதல் மூன்று போட்டிகளிலும் தோற்ற சிஎஸ்கே, தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.