IPL 2026: சிஎஸ்கே-வில் தோனி மட்டுமே செய்த மெகா கேப்டன்சி சாதனையை செய்து காட்டிய ருதுராஜ் கெய்க்வாட்
லக்னோ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மட்டுமே வைத்திருந்த ஒரு மாபெரும் சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் தற்போது எட்டியுள்ளார். லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான 59-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் களம் இறங்கிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக 1000 ரன்களைக் கடந்த 2-வது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.
தோனியின் சாதனைப் பட்டியலில் ருதுராஜ் கடந்த 2024-ம் ஆண்டு சிஎஸ்கே அணியின் முழுநேர கேப்டனாகப் பொறுப்பேற்ற ருதுராஜ், தனது 31-வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக 1000 ரன்களைத் தொட அவருக்கு வெறும் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆகாஷ் சிங் வீசிய ஆட்டத்தின் 2-வது ஓவரில் அந்த 4 ரன்களை எடுத்தபோது, ருதுராஜ் இந்த சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

இதற்கு முன்னதாக, சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி மட்டுமே 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 2008 முதல் 2025 வரை 221 போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி, மொத்தம் 4469 ரன்களை விளாசியுள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 8 போட்டிகளில் 112 ரன்களும், சுரேஷ் ரெய்னா 5 போட்டிகளில் 88 ரன்களும் கேப்டனாகப் பெற்றுள்ளனர்.
சாதனை நாளில் சறுக்கல்
இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 9 பந்துகளைச் சந்தித்த அவர், 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் தொடக்க வீரராகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால் சிஎஸ்கே அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் தனது 2 முக்கிய தொடக்க வீரர்களையும் இழந்து தடுமாறியது.
ஒருபுறம் கேப்டனாக ருதுராஜ் புதிய சரித்திரம் படைத்திருந்தாலும், அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியது. அடுத்து வந்த ஊர்வில் பட்டேல் 7 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications

