சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுவதற்கு முன்னதாக, முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கேவின் மூன்று தவறான முடிவுகளை விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது யூடியூப் வீடியோவில், சிஎஸ்கே அணியில் இரண்டு வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே வைத்திருப்பதை முதல் தவறு என ஆகாஷ் சோப்ரா விமர்சித்தார். மற்ற அணிகள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு வீரர்களைக் கொண்டிருக்க, சிஎஸ்கேவுக்கு இரு ஆப்சன்கள் மட்டுமே உள்ளன என்றார். பிரெவிஸுக்கு மாத்யூ ஷார்ட் பொருத்தமான மாற்று இல்லை என்பதும் இரண்டாவது விமர்சனமாக இருந்தது.

மாத்யூ ஷார்ட்டின் நான்காம் வரிசை புள்ளிவிவரங்கள் மிகவும் சாதாரணமானவை என சோப்ரா விளக்கினார். டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற சிறந்த மிடில் ஆர்டர் வீரர்கள் ஏலத்தில் கிடைத்தும், ஷார்ட்டைத் தேர்வு செய்தது ஒரு தவறான வியூகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காயம் அடைந்த நாதன் எல்லிஸுக்கு மாற்றாக காயம் அடைந்த ஸ்பென்சர் ஜான்சனை சிஎஸ்கே அணியில் சேர்த்தது மூன்றாவது தவறு என சோப்ரா தெரிவித்தார். "எல்லிஸ் காயம் அடைந்தபோது, காயம் அடைந்த ஒரு பந்துவீச்சாளரைத் தெரிவுசெய்தீர்கள். அவர் ஏப்ரல் 21 அல்லது 24 வரை கிடைக்கமாட்டார்," என்றார் அவர்.
ஜான்சன் 'டெத் ஓவர்' வீச்சாளர் எல்லிஸுக்கு பொருத்தமான மாற்று இல்லை. அவர் புதியப் பந்து வீச்சாளர் என சோப்ரா விளக்கினார். "உங்களுக்கு 'டெத் ஓவர்' சிறப்பு வீச்சாளர் தேவைப்பட்டார். இங்கும் சரியான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை," என்றும் அவர் பதிவு செய்தார்.காயம் காரணமாக ஐபிஎல் 2026 இல் நாதன் எல்லிஸ் விலகினார். அவருக்கு மாற்றாக ₹1.50 கோடிக்கு ஸ்பென்சர் ஜான்சனை சிஎஸ்கே அணியில் சேர்த்தது. ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜான்சன் தற்போது முதுகு காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.