மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் அதிரடி மாற்றங்களை செய்து இருக்கிறது. அணியின் முக்கிய வீரரான ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு அனுப்பிய நிலையில் சஞ்சு சாம்சனை வாங்கி உள்ளது.
இதுபோன்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பதிராணா அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம், சிஎஸ்கே வின் இந்த முடிவு எனக்கு ஆச்சரியம் அளிக்கின்றது.

ஏனென்றால் பதிராணாவை அவர்கள் மிகவும் நம்பி இருந்தார்கள். எதிர்காலத்திற்கு தேவையான வீரராக பதிராணாவை தேர்வு செய்து அவர் மீது அதிக முதலீடு செய்திருந்தார்கள். அவரை சிறந்த ஒரு பவுலராக வழி நடத்தி வந்தார்கள். அவரும் பலமுறை சிஎஸ்கே அணிக்காக சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். இதேபோன்று பதிராணா பல்வேறு டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.
இதன் மூலம் போதுமான அனுபவம் அவருக்கு கிடைக்கும். கடந்த சீசனில் பெரிய தாக்கத்தை பதிரானா ஏற்படுத்தவில்லை. இளம் வீரராகவும், திறமை வாய்ந்த வீரராகவும் அவர் இருக்கின்றார். பதிராணாவுக்கு சிஎஸ்கே இன்னும் நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்து அவருடைய பந்துவீச்சை மேம்படுத்தி இருக்க வேண்டும். அவருக்கு அதிக நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும்.
இதன் மூலம் மீண்டும் ஒருமுறை சிறப்பாக அவரால் செயல்பட்டிருக்க முடியும். ஆனால் சிஎஸ்கே அணி அவரை விடுவித்து இருப்பது என்னால் நம்ப முடியவில்லை. இதேபோன்று சிஎஸ்கே அணி கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவை விடுவிக்கும் என்று நான் முன்கூட்டியே நினைத்தேன்.
தற்போது இருவரும் சென்று இருப்பதால் சிஎஸ்கே அணி தங்களுடைய பிளேயிங் லெவனை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று சபாக்கரிம் தெரிவித்துள்ளார்.சிஎஸ்கே அணியில் தற்போது அஸ்வினும், ஜடேஜாவும் இல்லை. இதைப் போன்று ஆல்ரவுண்டர் சாம் கரணும், வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவும் நீக்கப்பட்டிருக்கிறார். இவர்களுக்கு மாற்று வீரர்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது குறிப்பிடத்தக்கது.