மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரராக வந்து தன்னுடைய முதல் போட்டியிலே 11 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார் உர்வில் பட்டேல். சையது முஸ்தாக் அலி அறிமுக போட்டியிலும், 28 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் 28 பந்துகளில் சதம் அடித்து சாதனையும் படைத்திருக்கிறார்.
தற்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் உர்வில் பட்டேல் வரும் ஐபிஎல் சீசனில் அணியில் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணி தொடக்க வீரர்களுக்கு சஞ்சு சாம்சனை தேடி வரும் நிலையில், அணியில் இருக்கும் உர்வில் பட்டேலுக்கு ஏன் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மையில் பெங்கால் அணிக்கு எதிராக குஜராத் அணி விளையாடிய ரஞ்சி போட்டியில் 96 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் உர்வில் பட்டேல் ஈர்த்து வருகிறார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிவப்பு நிற பந்தில் நான் விளையாட மிக சிறந்த இன்னிங்ஸ் இது என்று நினைக்கின்றேன்.
இந்தியாவில் உள்ள மாநில அணிகளில் பெங்கால் அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் பலம் வாய்ந்தது. அவர்களுக்கு எதிராக நான் அதிரடியாக ஆடியது மகிழ்ச்சியை அளிக்கின்றது. இதற்காக நான் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றேன். இதனால், நான் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என முந்தைய நாளை கற்பனை செய்து கொள்வேன்.
நான் தனிப்பட்ட முறையில் சதம் அடித்தது எனக்கு முக்கியம் கிடையாது. அணி வெற்றி பெற வேண்டும். நான் அடித்த சதம் மூலம் அணி வெற்றி பெற்றிருந்தால் அது உண்மையிலே இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். நான் சதம் அடித்த பிறகு பலரும் என்னை பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அன்பை நாம் பெறும் போது எப்போதும் நன்றாக தான் இருக்கும். நான் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடும் போது பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய இயல்பான ஆட்டத்தை நான் விளையாடும் போது எனக்கு நல்ல முடிவுகள் கிடைத்து இருக்கின்றது. எனக்கு கிடைத்த வாய்ப்பு நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
என்னுடைய தந்தை கிரிக்கெட் மீது கொண்ட காதல் மூலம்தான் எனக்கும் கிரிக்கெட் பிடித்தது. அதன் மூலம் தான் நான் கிரிக்கெட்டுக்குள் வந்தேன். ஐபிஎல் தொடரில் பிரபல வீரர்களுடன் மூன்று மாதம் ஒன்றாக பயணிப்பது பல விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது. அது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவும். எனக்கு சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பேட்டிங் ஸ்டைல் மிகவும் பிடிக்கும்.
எனது பேட்டிங் ஸ்டைல் ஹர்திக் போல் அமைந்திருக்கும். எனக்கு அவர் பல நல்ல அறிவுரைகளையும் வழங்கி இருக்கின்றார். தோனியை சந்திப்பது என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். நான் தோனியை பார்த்து தான் வளர்ந்தேன். அவர்தான் என் வாழ்க்கையில் அனைத்துமே. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் எனக்கு பல உந்துதலை கொடுத்தது.
சென்னை அணிக்கு சென்ற போது அவர் என்னை வரவேற்று எனக்கான அறிமுக தொப்பியை வழங்கி வாழ்த்தினார். அப்போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. அதனை உணர மட்டும் தான் முடிந்தது. ஐபிஎல் தொடரில் இறுதி கட்டத்தில் நாங்கள் இருந்ததால் தோனியிடம் பெரிய அளவு என்னால் பேச முடியவில்லை.
ஆனால் மனதளவில் எவ்வாறு பலமாக இருக்க வேண்டும் என்பது குறித்து தோனி என்னிடம் சில கருத்துக்களை கூறியிருந்தார். நான் சிஎஸ்கே அணிக்காக தொடர்வேனா இந்திய அணியில் விளையாடுவேனா என எதுவும் எனக்குத் தெரியாது. என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்து நாம் கவலைப்படுவதில்லை. அது கடவுளின் கையில் தான் இருக்கிறது என்று உர்வில் பட்டேல் கூறினார்.