மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து, சஞ்சு சாம்சனை வாங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக ஜடேஜா மற்றும் ஷாம் கரணை சிஎஸ்கே அணி ராஜஸ்தானிடம் வழங்கியிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்காக எந்த வீரர்களை விடுவிக்கின்றோம். யாரை தக்க வைக்கின்றோம் என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்கு வெளியிட வேண்டும். இதற்காக பல்வேறு அணிகள் தீவிரமாக காய் நகர்த்தி வந்தது.

அந்த வகையில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி மாற்றங்களை செய்து இருக்கிறது. அதன்படி சிஎஸ்கே அணிக்குள் சஞ்சு சாம்சன் வந்திருக்கிறார். இதேபோன்று நியூசிலாந்து ஜோடியான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரை சிஎஸ்கே அணி விடுவித்து இருக்கிறது.
கான்வே கடந்த ஆண்டு 6 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கும் சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. ரச்சின் ரவீந்திரா கடந்த சீசனில் மொத்தமாகவே 191 ரன்கள் தான் அடித்து இருந்தார். கான்வே 156 ரன்கள் எடுத்திருந்தார். இதன் காரணமாக இருவரும் விடுவிக்கப்பட உள்ளனர்.
இதேபோன்று இந்திய வீரர்களான ராகுல் திருப்பாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா உள்ளிட்ட வீரர்களும் அணியை விட்டு விடுவிக்கப்பட இருக்கின்றனர். ஏற்கனவே தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஓய்வு பெற்றிருப்பதால் ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் சிஎஸ்கே அணிக்கு கிடைக்கும். இதன் மூலம் வரும் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு மொத்தமாக (கூடுதலாக 5 கோடி ரூபாயை சேர்த்து) 30 அல்லது 31 கோடி ரூபாய் கையிருப்பில் இருக்கும்.
அதை வைத்துக்கொண்டு சிஎஸ்கே அணி ஜடேஜாவுக்கு மாற்றான ஒரு சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் நடு வரிசையில் ஒரு வெளிநாட்டு வீரர் ஆகியோரை வாங்க வேண்டும். சிஎஸ்கே அணி மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற வெளிநாட்டு வீரர்களை வாங்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே வின் இந்த அதிரடி மாற்றங்கள் மூலம் அந்த அணியின் பலம் பெரும் அளவு அதிகரித்து இருக்கிறது.