சென்னை: ஐபிஎல் வரலாற்றில் அரிதாக நடக்கும் 'ரிட்டையர் அவுட்' முறை மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி வந்த 18 வயது இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவை பாதியிலேயே வெளியேறச் சொன்ன சிஎஸ்கே அணியின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 18-வது லீக் போட்டியில் இந்தச் சம்பவம் நடந்தது.
இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் நட்சத்திரமாகப் பார்க்கப்படும் ஆயுஷ் மத்ரே, நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த அவரை, 18-வது ஓவரின் போது அணி நிர்வாகம் திடீரென பெவிலியனுக்குத் திரும்புமாறு அழைத்தது. இன்னும் 15 பந்துகள் மீதமிருந்த நிலையில், அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஒரு வீரரை வெளியேற்றியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக ஒரு வீரர் ரன் எடுக்கத் திணறினால் மட்டுமே இந்த 'ரிட்டையர் அவுட்' முறை பயன்படுத்தப்படும். ஆனால், லுங்கி இங்கிடி போன்ற அனுபவ பந்துவீச்சாளர்களின் ஓவரிலேயே பவுண்டரிகளை விளாசி வந்த மத்ரேவை ஏன் வெளியேற்றினார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த முடிவில் துளிக்கூட விருப்பமில்லாத முகபாவனையுடன் ஆயுஷ் மத்ரே, மிகுந்த அதிருப்தியுடன் யாரிடமும் பேசாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஆயுஷ் மத்ரேவுக்குப் பதில் அதிரடி வீரர் சிவம் துபே உள்ளே வந்தார். ஆனால் அவர் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் 15-வது ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 1 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 5 ஓவர்களில் விக்கெட் ஏதும் விழாத நிலையிலும் (ரிட்டையர் அவுட் தவிர), சிஎஸ்கே அணியால் 52 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆயுஷ் மத்ரே சந்தித்த கடைசி 9 பந்துகளில் சரியாக ரன் குவிக்கவில்லை என்ற ஒரு காரணம் கூறப்பட்டாலும், அவரால் கடைசி 2 ஓவர்களில் மீண்டும் அதிரடிக்கு மாறி இருக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
உண்மையைச் சொல்லப்போனால், சதம் அடித்த சஞ்சு சாம்சன் கடைசி நேரத்தில் ரன் எடுக்க மிகவும் சிரமப்பட்டார். அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். ஒருவேளை யாரையாவது வெளியேற்ற வேண்டுமென்றால் அது சாம்சனாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அணியில் இருக்கும் ஒரு இளம் வீரர் என்பதால் ஆயுஷ் மத்ரேவை எளிதாகப் பலிகடா ஆக்கிவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்து வருகின்றனர்.

பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் போன்ற அணிகள் கடைசி ஓவர்களில் காட்டும் அதிரடியை ஒப்பிடும்போது, சிஎஸ்கே அணி இன்னும் கூடுதல் ரன்களைக் குவித்திருக்கலாம். ஐபிஎல் வரலாற்றில் 'ரிட்டையர் அவுட்' ஆகும் 6-வது வீரர் மத்ரே ஆவார். இதற்கு முன் அஸ்வின், அதர்வா தைடே, சாய் சுதர்சன், திலக் வர்மா மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் இந்த முறையில் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.