IPL 2026: 23 பந்தில் 65 ரன் சிஎஸ்கே வீரருக்கு ஒன்னும் இல்லை.. 3 விக்கெட் எடுத்தவருக்கு POTM விருது
சென்னை: சேப்பாக்கத்தில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஆனால், போட்டியின் முடிவில் அறிவிக்கப்பட்ட ஆட்டநாயகன் விருது குறித்து சமூக வலைதளங்களில் தற்போது ஒரு மிகப்பெரிய விவாதமே கிளம்பியுள்ளது. 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்து லக்னோ பந்துவீச்சை துவம்சம் செய்த இளம் வீரர் ஊர்வில் படேலுக்கு அந்த விருது கிடைக்கும் என மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில், பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டனுக்கு விருது வழங்கப்பட்டது ஏன்? இதன் பின்னணியில் உள்ள காரணங்களை அலசுவோம்.
முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அசுர வேகத்தில் ரன் சேர்த்தார். அவர் மட்டும் இன்னும் சில ஓவர்கள் நிலைத்திருந்தால் லக்னோவின் ஸ்கோர் 240 ரன்களைத் தாண்டியிருக்கும். இக்கட்டான அந்த நேரத்தில் இங்கிலிஸின் விக்கெட்டை ஜேமி ஓவர்டன் வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு நிம்மதி அளித்தார்.

அதுமட்டுமின்றி, லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அதிரடி வீரர் அக்ஷத் ரகுவன்ஷி ஆகியோரின் விக்கெட்டுகளையும் அவரே சாய்த்தார். 4 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியது லக்னோவின் ரன் வேகத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தியது.
மறுபுறம் 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு ஊர்வில் படேல் பெரிய அளவில் உதவினார். வெறும் 13 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். மொத்தம் 23 பந்துகளைச் சந்தித்த அவர் 8 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 282 ஆகும்.
சிஎஸ்கே அணி முதல் 6 ஓவர்களிலேயே 97 ரன்கள் குவிக்க இவரே முக்கிய காரணமாக இருந்தார். இவ்வளவு மிரட்டலான ஆட்டத்தை ஆடியும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படாதது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
பொதுவாக டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். ஆனால், இப்போட்டியில் ஜேமி ஓவர்டன் வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் ஆட்டத்தின் போக்கை மாற்றிய திருப்புமுனைகளாக அமைந்தன. குறிப்பாக 85 ரன்கள் எடுத்த இங்கிலிஸ் மற்றும் ரிஷப் பண்ட் விக்கெட்டுகள் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்தன.
ஒருவேளை இவர்கள் இருவரும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இலக்கு இன்னும் அதிகமாகியிருக்கும். இதன் காரணமாகவே நடுவர்கள் ஓவர்டனைத் தேர்வு செய்துள்ளனர். இருப்பினும், கிரிக்கெட் ரசிகர்கள் "ஊர்வில் படேல் ஆடிய அந்த அதிரடி அரைசதம் தான் சிஎஸ்கே அணிக்கு முழுமையான நம்பிக்கையைத் தேடித்தந்தது" என வாதிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஊர்வில் படேலுக்கு ஆதரவாக ரசிகர்கள் பல கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். எது எப்படியோ, சிஎஸ்கே அணிக்கு ஊர்வில் பட்டேல் என்ற புதிய அதிரடி நாயகன் கிடைத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications
