IPL 2026: மும்பை பொருளை எடுத்து மும்பையே போட திட்டம்.. பவுலிங்கை மாற்றும் சிஎஸ்கே?
சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் முக்கிய லீக் ஆட்டம் இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே ஒரு முறை மோதிய நிலையில், அதில் சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த சூழலில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்தில் களமிறங்குகிறது.

அதேபோன்று சிஎஸ்கே அணியும் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ள நிலையில் அடுத்தடுத்த ஆட்டங்களில் வென்றால் மட்டுமே டாப் 4 இடத்திற்கு செல்ல முடியும் என்ற நிலை இருக்கின்றது. இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி பேட்டிங் சஞ்சு சாம்சனை நம்பியே இருக்கின்றது. ஆனால் பந்துவீச்சில் அகில் உசேன் மற்றும் நூர் அகமது போன்றவர்களால் கொஞ்சம் மேம்பட்டு உள்ளது.
வேகப்பந்துவீச்சு பிரிவில் அன்சூல் காம்போஜ், முகேஷ் சவுத்ரி, ஆகியோர் திருப்திகரமாக செயல்படுகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் குர்ஜப்னீத் சிங் என்ற இடது கை வேகப்பந்துவீச்சாளர் அணியில் தொடர்கிறார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த சீசனில் இதுவரை 85 பந்துகளை வீசி 139 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். சராசரியாக ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட 10 ரன்களை அவர் வழங்கியிருக்கிறார். குர்ஜிப்னீத் சிங் பெரிய அளவு அணியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் சிஎஸ்கே அணி அவரை நீக்கிவிட்டு புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ஆகாஷ் மத்வாலுக்கு வாய்ப்பு வழங்கலாமா என்று யோசித்து வருகிறது.
ஆகாஷ் மத்வால் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர். இதனால் அவரை சேர்ப்பது மூலம் மும்பை வீரர்களின் குறைகளை தெரிந்திருப்பவர் என்பதால் அது சிஎஸ்கேவுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது. இதுவரை 17 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருக்கிறார். ஆகாஷ் மத்வால் யாக்கர்களை சிறப்பாக வீசி நெருக்கடி கொடுக்கக் கூடியவர். இதனால் சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனில் ஆகாஷ் மத்வால் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications